கோவை: கோவையில் RTO விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன்களைக் கொண்ட அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையின் E2 பீளமேடு போக்குவரத்து பிரிவு மற்றும் தெற்கு பீளமேடு வட்டார போக்குவரத்து அலுவலகம் (RTO) இணைந்து, அவிநாசி சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் சிறப்பு சோதனை நடத்தினர். சோதனையின்போது வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹார்ன்களின் ஒலி அளவு டெசிபெல் மீட்டர் மூலம் சோதனை செய்யப்பட்டது.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சத்தம் எழுப்பும் ஹார்ன் வைத்துள்ள வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அதிவேக இயக்கம், அஜாக்கிரதையான வாகன ஓட்டம், அதிக சுமை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவையும் கண்காணிக்கப்பட்டது.
இது குறித்து கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பூங்கோதை கூறுகையில், ஏர் ஹார்ன் பயன்பாடு பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக உள்ளது என்றும் இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம் என்றும் இதுபோன்ற சிறப்பு மற்றும் திடீர் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றார்.
60 முதல் 80க்குள் டெசிபல் ஒலி அளவு இருக்க வேண்டும் விதிமுறைகளை மீறி அதிக ஒளி சத்தம் கொண்ட வாகனங்களுக்கு அபராதம் மிதிக்கப்பட்டு வருகிறது மேலும் அதனை மீறி ஒரே வாகனம் மீண்டும் மீண்டும் விதிமீறினால் கடுமையான நடவடிக்கை, தேவையானால் வாகன அனுமதி தொடர்பான நடவடிக்கைகளும் எடுக்கப்படும், என்றார்.
மேலும், அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்துகள் மீதும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாள்தோறும் களப்பணியில் ஈடுபடும் அதிகாரிகள் வாகனங்களை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.





