கோவை: கோவையில் மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட வடமாநில வாலிபரை தட்டிக்கேட்ட சமையல்காரரை மரக்கட்டையால் தாக்கி காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார் (34), கோவை சரவணம்பட்டி சிவானந்தாபுரம் பகுதியில் தங்கி சமையல்காரராக பணியாற்றி வருகிறார். நேற்று அவர், தனது நண்பர் ரஞ்சித் குமாரை சந்திப்பதற்காக சிவானந்தாபுரத்தில் உள்ள அவரது அறைக்குச் சென்றிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வடமாநில வாலிபர் ஒருவர், அதிக மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட சசிகுமார், அந்த நபரை தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், சசிகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு அருகில் இருந்த ஓட்டலுக்குள் ஓடிச் சென்றுள்ளார். அவரைப் பின்தொடர்ந்து சென்ற சசிகுமார் மற்றும் ரஞ்சித் குமார், ஏன் திட்டினாய் என்று கேட்டுள்ளனர்.
இதில் மேலும் ஆவேசமடைந்த அந்த வாலிபர், அங்கு இருந்த மரக்கட்டையை எடுத்து இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். தாக்குதலில் சசிகுமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரஞ்சித் குமாருக்கும் காயம் ஏற்பட்டது.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்த அந்த வாலிபர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் காயமடைந்த சசிகுமார் மற்றும் ரஞ்சித் குமார் இருவரும் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சசிகுமார் அளித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத வடமாநில வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.





