கோவை: கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் வழங்கும் சூயஸ் திட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் முறையாக சீரமைக்கப்படாததால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை மாநகராட்சியின் 60 வார்டுகளில் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சூயஸ் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது சுமார் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஆனால், திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பல சாலைகள் தரமாக சீரமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. பல இடங்களில் பேட்ச் ஒர்க் (Patch Work) தரமின்றி செய்யப்பட்டதால், சில நாட்களிலேயே சாலைகள் மீண்டும் குண்டும் குழியுமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read: ஏன் ரகளை செய்கிறாய்?… கேட்டதற்கே சமையல்காரரை தாக்கிய வடமாநில வாலிபர்!
இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைவதாகவும், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
சூயஸ் திட்டப் பணிகளுக்குப் பிறகு சாலைகளை முறையாக சீரமைக்காததற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சி இதுவரை ரூ.65 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளது.
Also Read: உக்கடம் மேம்பாலத்தில் ஆளில்லாமல் சென்ற பைக்; பரபரப்பு வீடியோ வைரல்
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “சூயஸ் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக தோண்டப்படும் சாலைகள் தரமாக சீரமைக்கப்பட வேண்டும். தரமற்ற பேட்ச் ஒர்க் காரணமாக சாலைகள் விரைவில் சேதமடைந்து விபத்துகளுக்கு வழிவகுக்கிறது. இதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சூயஸ் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்குப் பிறகு சாலைகள் தரமாக சீரமைக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தரமின்றி பணிகள் மேற்கொள்ளப்பட்டால் அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.





