கோவை: கோவையிலேயே குடோன்கள் அமைத்து தர வேண்டும் ஆன்லைன் விற்பனையை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட பட்டாசு வணிகர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
பட்டாசுகளை ஆன்லைனில் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவையிலேயே புறநகரில் பட்டாசுகளை சேமித்து வைக்க குடோன்கள் ஏற்படுத்தி தர வேண்டும், பட்டாசுகளை கிலோ கணக்கில் விற்பனை செய்வதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும், தீபாவளி காலத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளீடு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாசு வணிகர்கள் நல சங்கத்தினர் மனு அளித்தனர்.
இதுகுறித்து பேசிய இச்சங்கத்தின் தலைவர் கல்யாணசுந்தரம், தீபாவளி பண்டிகை காலத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைத்து மாவட்டம் முழுவதும் பட்டாசு விற்பனை செய்து வரும் நிலையில் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை நடைபெறுவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யப்படும் பொழுது தரமற்ற பட்டாசுகள் பொது மக்களுக்கு கிடைப்பதாகவும் அவை பேருந்துகள் போன்ற பொது போக்குவரத்தில் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்தார்.
பட்டாசு கடை அமைப்பதற்கு உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் பொழுது பல்வேறு பகுதிகளில் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு தான் உரிமத்திற்கான அனுமதி கிடைக்க பெறுவதாகவும் எனவே அதனை ஒரு மாதத்திற்கு முன்பே கிடைப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அண்மைக்காலமாகவே கிலோ கணக்கில் பட்டாசுகள் விற்பனை என்பது சில கடைகளில் நடைபெற்று வருவதாகவும் அவ்வாறு விற்பனை செய்யக்கூடாது MRP விலையில் தான் விற்பனை செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கூறியிருப்பதாகவும் எனவே கிலோ கணக்கில் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த பட்டாசுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கிலோ கணக்கில் விற்பனை என்பது பொதுமக்களை ஏமாற்றும் செயல் என்றும் இது குறித்து போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் ஸ்டாக் வைத்துக் கொள்வதற்கு சிவகாசியில் தான் குடோன்கள் இருப்பதாகவும் எனவே மாவட்டத்தில் சிறு சிறு குடோன்கள் அமைத்து தர வழிவகை செய்து தருமாறும் அதற்கான வாடகையை செலுத்துவதற்கும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.





