கோவை: நேரு விளையாட்டு அரங்கம் அருகேயுள்ள கால்பந்து மைதானத்தை வாகன நிறுத்துமிடமாக மாற்றும் திட்டத்தை கைவிட கோரி கோவை மாவட்ட முதியோர் கால்பந்து சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளுடன் பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். அப்போது கோவை மாவட்ட முதியோர் கால்பந்து சங்கத்தினரும் கால்பந்து மைதானத்தை பாதுகாக்க கோரி மனு வழங்கினர்.
இதுகுறித்து சங்கத்தின் பிரதிநிதி மாரியப்பன் கூறுகையில், வ.உ.சி. மைதானம் அருகே அமைந்துள்ள இந்த கால்பந்து மைதானம் கோவையின் பாரம்பரிய விளையாட்டு அடையாளங்களில் ஒன்றாகும். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 200-க்கும் மேற்பட்ட கால்பந்து வீரர்கள் இந்த மைதானத்தில் தொடர்ந்து பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஓய்வு பெற்ற வீரர்கள் உள்ளிட்ட பலரும் தினசரி இந்த மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மைதானத்தை வாகன நிறுத்துமிடமாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே விளையாட்டு மைதானங்கள் குறைந்து வரும் சூழலில், இளைஞர்களுக்கு விளையாடுவதற்கான வாய்ப்புகள் சுருங்கி வருகின்றன. இந்த மைதானமும் அகற்றப்பட்டால், கால்பந்து வீரர்கள் பயிற்சி பெறும் வாய்ப்பை இழப்பதுடன், எதிர்காலத்தில் திறமையான வீரர்கள் உருவாகும் சூழலும் பாதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
எனவே, கால்பந்து மைதானத்தை வாகன நிறுத்துமிடமாக மாற்றும் திட்டத்தை கைவிட்டு, விளையாட்டு மைதானமாகவே தொடர்ந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.





