கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் பூங்கை மரம் வேரோடு சாய்ந்து அரசு வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களில் மீது விழுந்ததால் வாகனங்கள் சேதம் அடைந்தன.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே bsnl அலுவலக வளாகம் உள்ளது. அதற்கு பின்னால் தாமஸ் கிளப் உள்ளது. அந்த வளாகத்திற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கும் இடையில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த வளாகத்திற்குள் பல்வேறு மரங்கள் செடி கொடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த வளாகத்தில் இரும்பு வேலியை ஒட்டி இருந்த பெரிய பூங்கை மரம் ஒன்று வேரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் சாய்ந்தது. அப்பொழுது ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு வாகனம் மற்றும் தனிநபர் கார்களின் மீது மரம் விழுந்ததால் இரண்டு மூன்று வாகனங்கள் சேதம் அடைந்தன.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு பணி துறையினர் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.




