கோவை: கோவையில் வாலாங்குளம் பகுதியில் இளம் ஜோடிகளை மறைந்திருந்து பார்த்ததாகக் கூறப்படும் வாலிபரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வாலாங்குளம் பகுதி சீரமைக்கப்பட்டு, நடைபாதை, ஊஞ்சல், இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் ஏராளமான பொதுமக்கள், குடும்பத்தினர் மற்றும் இளம் ஜோடிகள் இந்த பகுதிக்கு வந்து நேரத்தை செலவிடுகின்றனர்.
இதனிடையே, இரவு நேரங்களில் சிலர் அத்துமீறி நடந்து கொள்வதாகவும், அதனைத் தடுக்க பாதுகாவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவர் மின் கேபிளை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட பாதுகாவலர்கள் அவரைப் பிடிக்க முயன்றபோது, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
Also Read: கோவை கட்டாஞ்சி மலையடிவாரத்தில் யானைக் கூட்டம்- வனத்துறையின் எச்சரிக்கை- வீடியோ காட்சிகள்…
பின்னர், நள்ளிரவு 1 மணி அளவில் அதே நபர் மீண்டும் இருளான பகுதியில் மறைந்து நின்றிருந்ததை பாதுகாவலர்கள் கவனித்தனர். உடனடியாக அவரை மடக்கிப் பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், வாலாங்குளம் பகுதிக்கு வரும் தம்பதிகள் மற்றும் இளம் ஜோடிகளை மறைந்திருந்து பார்ப்பதற்காகவே மின் கேபிளை வெட்டி இருளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும் விசாரணையில், அவர் கணபதி பகுதியைச் சேர்ந்த 22 வயதான பிரசாத் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு ஐபோன் மற்றும் ஒயர் கட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.





