கோவை: கிழக்கு புறவழி சாலை திட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவையில் கிழக்கு புறவழிச் சாலை திட்டப்பணிகள் கடந்த ஆட்சியின் பொழுது மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அத்திட்டமானது விவசாய நிலங்கள் வழியாக செயல்படுத்துவதாகவும் அதற்கு கண்டனம் தெரிவித்தும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் பலகட்ட தொடர் போராட்டங்கள் காரணமாக மத்திய அரசு அந்த கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை தற்போது கைவிட்டுள்ளது.
இந்த நிலையில் கிழக்கப் புறவழிச் சாலை கோவையின் வளர்ச்சிக்கு அது மிகவும் அவசியம் என்று பல்வேறு தொழில் துறையினர் மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு வலியுறுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியும் ஆதரவு தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மத்திய அரசு அந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும் தொழில்துறையினரின் கோரிக்கைக்கு முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆதரவு அளித்ததற்கு அவருக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.
கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்கத்தினர், கிழக்கு புறவழிச் சாலை திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் 1200 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலைகளை இடது புறம் வலது புறம் விரிவு படுத்தினாலே போதுமானதாக இருக்கும் என்றனர். தொழில் துறையினர் பெரும் முதலாளிகள் அவர்களின் தேவைகளுக்காகவும் அவர்களின் நிலங்கள் விலை ஏற்றம் அடைய வேண்டும் என்று கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை கொண்டுவர முயல்வதாக தெரிவித்தனர்.
மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட்டாலும் மாநில அரசு இதனை கையில் எடுத்து செயல்படுத்த வேண்டும் என்ற தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியும் ஆதரவு அளித்திருப்பதாகவும் எனவே எஸ் பி வேலுமணிக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்வதாக கூறினர்.
தற்பொழுது உள்ள சாலைகளை விரிவு படுத்தி தேவையான இடங்களில் மேம்பாலங்கள் அமைத்தாலே போதும் என்ற விவசாயிகள் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பொழுது சந்தை விலை இழப்பீடாக கிடைத்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்றனர்.
சிறு குறு விவசாயிகள் தான் இந்த திட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்ற அவர்கள் கோவையின் தொழில் வளர்ச்சிக்கு விவசாயிகள் என்றும் உதவியாக இருப்போம் என்றும் ஆனால் விவசாய நிலங்களை அழித்து அதனை செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தினர். சாலைகளை விரிவுபடுத்த போதுமான இடவசதிகள் இருந்தும் அதனை மேற்கொள்ளாமல் விவசாய நிலங்களை குறி வைப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.





