கோவை: கோவையில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. நேற்று வீட்டில் சோர்வாகவும், அச்சத்துடனும் இருந்ததைப் பார்த்த பெற்றோர்கள், இதுகுறித்து சிறுமியிடம் கேள்வி எழுப்பினர்.
அப்போது கதறி அழுத சிறுமி, தன்னை இருவர் பாலியல் வங்கொடுமை செய்துவிட்டதாகக் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து போத்தனூரில் உள்ள கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மேட்டூரைச் சேர்ந்த சந்தோஷ், வயது 24, மற்றும் வெள்ளலூரை அடுத்த கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 24), தவசி (வயது 28) ஆகிய இரண்டு கூலித்தொழிலாளர்களும் இந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, போலீசார் அவர்கள் இருவரையும் நேற்று இரவு கைது செய்தனர். இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், சந்தோஷ் மீது ஏற்கனவே வழிப்பறி வழக்கு இருப்பதும், தவசி மீது ஏற்கனவே வீட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
மேலும், இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, இதனை வெளியில் சொன்னால் வெட்டிவிடுவேன் என்று அரிவாளைக் காட்டி மிரட்டியதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அரிவாளை கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு சுடுகாட்டில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அந்தப் பகுதிக்கு இருவரையும் அழைத்துச் சென்றபோது, தவசி அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிவாளை திடீரென எடுத்தார். மேலும், அங்கிருந்து தப்ப முயன்று போலீசாரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அரிவாளை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு தவசியிடம் கூறினர். ஆனால், தவசி அதற்கு மறுத்தும், அங்கிருந்த பெண் காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியை அரிவாளால் வெட்டினார். மேலும், அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

இதையடுத்து, அங்கிருந்த உதவி ஆய்வாளர் சிலம்பரசன், தவசியின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார்.
தொடர்ந்து, காயமடைந்த தவசியை கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தவசிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரிவாள் தாக்குதலில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே சந்தோஷிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவையில் தொடர்ச்சியாக கொலைகளும், குற்றச் சம்பவங்களும் அரங்கேறி வரும் நிலையில், 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





