கோவை: கோவை மாவட்ட காவல்துறை சார்பில் “போதை இல்லா கோவைக்காக ஓடுவோம்” என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறுகிறது. அனைத்து வயதினரும் இலவசமாக பங்கேற்கலாம்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் K. ரெட்டி தலைமையில் நடைபெறும் இந்த மாரத்தான், “Run for a Cause. Run for a Drug-Free Coimbatore” (ஒரு நோக்கத்திற்காக ஓடுவோம்… போதை இல்லா கோவைக்காக ஓடுவோம்) என்ற கருப்பொருளிலும், “ORU MUDIVIN THODAKKAM – Run Until – Every Finish is a New Beginning” (ஒரு முடிவின் தொடக்கம் – ஒவ்வொரு நிறைவும் ஒரு புதிய தொடக்கம்) என்ற முழக்கத்துடனும் நடத்தப்படுகிறது.
போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
மாரத்தான் போட்டி காலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதில், அனைத்து வயதினருக்குமான 5 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான 2 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயம் என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த போட்டியில் பங்கேற்பது முற்றிலும் இலவசம். சமூகத்தின் அனைத்து தரப்பினரும் எந்தவித கட்டணமும் இன்றி இதில் கலந்து கொள்ளலாம்.
போட்டியில் வெற்றி பெறுவோருக்கு மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும், போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் “Finisher’s Certificate” வழங்கப்படும்.
போட்டி நடைபெறும் இடம், பதிவு செய்யும் முறை, ஓட்டப்பாதை, தகுதி விதிமுறைகள் மற்றும் பரிசு விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு என்பது காவல்துறையின் பொறுப்பு மட்டுமல்ல; பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என கோவை மாவட்ட காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
எனவே, குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று, “போதை இல்லா கோவை” உருவாக்கும் மக்கள் இயக்கத்தில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என கோவை மாவட்ட காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.





