கோவை: கோவையில் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி 2 மாதங்கள் தலைமறைவாக இருந்த கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி 2 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளி கும்பலைச் சேர்ந்த ஒருவரைப் போலீஸார் கைது செய்து உள்ளனர். மேலும், 31 வழக்குகள் நிலுவையில் உள்ள முக்கிய ரவுடி உட்பட நால்வரைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் சி.பி.சி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (தாளியூர் பேரூராட்சி ஊழியர்). இவருடைய மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
இவருக்குச் சென்னை வீருகம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உடள்ளது. ஒரு கட்டத்தில் கார்த்திக் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் இருப்பது தெரியவரவே, அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அவருடனான பழக்கத்தை முற்றிலும் துண்டித்து உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி கார்த்திக், கடந்த மே 25-ஆம் தேதி தனது கூட்டாளிகளுடன் பைக்குகளில் வந்து சுந்தரமூர்த்தியின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்களை குண்டு வீசி எறிந்து கொலை மிரட்டல் விடுத்தார்.
இச்சம்பவம் குறித்துத் தொண்டாமுத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற அந்த மாணவியை, ரவுடி கார்த்திக் மீண்டும் தனது கூட்டாளியுடன் பின்தொடர்ந்து மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன மாணவி அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்து தப்பினார்.
இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்திய தொண்டாமுத்தூர் காவல் துறையினர், பெட்ரோல் குண்டு வீசிய கும்பலைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டம் செய்யாமங்கலம் பகுதியைச் சேர்ந்த கிருத்திக் ரோஷன் (23) என்பவரைக் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து குற்றச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்து உள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 31 வழக்குகளில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான ரவுடி கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரைத் தேடும் பணியைப் போலீஸார் தீவிரப்படுத்தி உள்ளனர்.





