கோவை: அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மருத்துவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்புக் குழுத் தலைவர், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.
விழாவுக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, நீட் தேர்வு தேவையா என்ற கேள்வி தொடர்ந்து இருப்பதாகவும், அதேநேரத்தில் மாணவர்கள் எந்தவொரு போட்டித் தேர்வை எதிர்கொண்டாலும் அதற்கு தயாராகும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
புதிய பாடத்திட்டத்தில் ஆரம்பக் கல்வி முதலே திறன் மேம்பாடு, மொழி அறிவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என தெரிவித்த அவர்,மாணவர்களின் அடிப்படை அறிவு, சிந்திக்கும் திறன், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன், படைப்பாற்றல் மற்றும் மொழித்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் கல்வி முறை அமைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஆரம்பக் கல்வி முதலே மாணவர்களின் திறன்களை கண்டறிந்து, அதற்கேற்ப அவர்களுக்கு பயிற்சி அளிப்பது புதிய பாடத்திட்டத்தில் முக்கிய அம்சமாக இருக்கும் என்றும் கூறினார்.




