கோவை:மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 5 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டு பீகாரை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் ரெட்டி உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மதுக்கரை காவல் நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கற்பகம் கல்லூரி டோல்கேட் அருகே சந்தேகத்திற்கிடமாக இருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மோஷம் குமார் என்பது தெரியவந்தது.
அவரிடமிருந்து 4 கிலோ 850 கிராம் கஞ்சா , 400 கிராம் கஞ்சா சாக்லேட்* மற்றும் இரு சக்கர வாகனம்-1 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் மீது மதுக்கரை காவல் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, காவல்துறையினரால் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கோவை மாவட்ட காவல்துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது பகுதிகளில் போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால், அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது காவல்துறையின் உதவி எண்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து சமூக நலனுக்காக ஒத்துழைக்குமாறு கோவை மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள், கோவை மாவட்ட காவல்துறையின் “நிழல்” (Nizhal) என்ற QR குறியீடு அடிப்படையிலான பாதுகாப்புத் தளத்தைப் பயன்படுத்தி, தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியமாக தகவல்களை பகிரலாம். மேலும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981 81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081 00100 ஆகிய எண்களிலும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.





