கோவை: சின்னத்தடாகத்தில்
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில்
பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பாக கோவை சின்னத்தடாகம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குட்டைகள், நீர்வழிப்பாதைகள் மற்றும் தடுப்பணைகளை தூர்வாரி, மழைநீரை சேமிக்க வேண்டும், நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சார்பில், தமிழக அரசுக்கு தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்ட வந்த நிலையில் அந்த மனுக்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினார். இதை கண்டித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் சின்னத்தடாகம் பேருந்து நிலையம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கொள்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் வீரபாண்டிபுதூர் ஆர் வி சி நடராஜன் வரவேற்புரை வழங்கினார். கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே என் எல் ஓ துரைசாமி கருத்துரை வழங்கினார். சோமையனூர் ஆசிரியர் மாணிக்கம், சுந்தர்ராஜன், சோமசுந்தரம், காளையனூர் மனோகரன், வரப்பாளையம் ஜீவானந்தம், 24 வீரபாண்டி புதூர் பவர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் வேணுகோபால் கூறுகையில் சின்னதடாகம், தடாகம், 24 வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருவதுடன், கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து கிடைக்கும் மழைநீரை முறையாக சேமித்து பயன்படுத்துவதற்கான நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதைகள் முறையாக பராமரிக்கப்படாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை சேமிக்கும் வகையில், கிராமங்களில் உள்ள மழைநீர் சேமிப்பு குட்டைகள், நீர்வழிப்பாதைகள் மற்றும் தடுப்பணைகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதுடன், விவசாயத்திற்குத் தேவையான நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அத்திக்கடவு–அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள பகுதிகளான பவானிசாகர், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியப் பகுதிகளை இணைத்து, மழைக்காலங்களில் கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் செல்லும் உபரி நீரை பயன்படுத்தும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்க வனப்பகுதிகளில் தேவையான குடிநீர் தொட்டிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்
மேலும் கேரளா மாநிலம் போல விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காற்று பன்றிகளை சுட்டுக் கொள்ள வேண்டும் அல்லது விவசாயிகளே சுட்டுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், காடுகளில் இருந்து வெளியே வரும் யானைகளை சுட்டுக்காட்டுக்குள் விரட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் வரும் 20-ம் தேதி சென்னையில் சட்டசபை முற்றுகை போராட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.





