கோவை: கோவில்பாளையம் பகுதியில் சுமார் 21 கிலோ கிராம் கஞ்சாவை கோவை மாவட்ட காவல்துறையினர் பறிமுதல் செய்து இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.
போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்ரெட்டி, அறிவுறுத்தலின் படி கோவில்பாளையம் காவல் நிலைய காவல்துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்துறையினர் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்று வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கோவை பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (21) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 21 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், காவல்துறையினர் அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்டம்-ஒழுங்கிற்கு எதிராகச் செயல்பட்டாலோ, சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள், கோவை மாவட்ட காவல்துறையின் நிழல் (Nizhal) என்ற QR குறியீடு அடிப்படையிலான பாதுகாப்புத் தளத்தைப் பயன்படுத்தி, தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியமாக தகவல்களை பகிரலாம்.
மேலும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981 81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081 00100 ஆகிய எண்களிலும் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.





