கோவை: மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்பட்டு இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டது.
இஸ்லாமியர்களின் இறைத்தூதராக கருதப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாடி நபியாக கொண்டாடி வருகின்றனர். இன்றைய தினம் நபிகள் நாயகத்தின் புகழையும் ஈகை பண்பையும் பொதுமக்களிடையே எடுத்துரைக்கும் என்னும் பல்வேறு நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படும்.

இன்றைய தினம் ஏழை எளிய மக்களின் பசியை ஆற்ற வேண்டும் என்பது இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவாக கருதப்படுகிறது. அதன்படி பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தப்ருக் எனப்படும் உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றன.
கோவையில் உக்கடம் ஜி.எம் நகர் பகுதியில் சுன்னத் ஜமாத் சார்பில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணும் அளவிற்கு நெய் சோறு சமைக்கப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டது.

ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக வரிசை அமைக்கப்பட்டு காலை முதலே உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனை அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை புரிந்து வாங்கி செல்கின்றனர்.
கடந்த பத்து ஆண்டுகளாக சுன்னத் ஜமாத் சார்பில் இலவசமாக நெய் சோறு வழங்கப்பட்டு வரும் நிலையில் 11 வது ஆண்டாக இன்றும் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





