கோவை: திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நீண்ட நாட்களாக திருமண வரன் தள்ளிப்போயுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த குடும்பத்தினர், பரிகாரங்கள் செய்வதற்காக கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவரை அணுகியுள்ளனர்.
பரிகாரங்கள் செய்வதாகக் கூறி அப்பெண்ணிடம் நெருக்கம் காட்டிய ஜோதிடர், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை அளித்ததாகத் தெரிகிறது.
தொடர்ந்து, ஜோதிடர் தனக்குக் கடன் சுமை இருப்பதாகக் கூறியும், உறவினர் விபத்தில் சிக்கியிருப்பதாகப் பொய் கூறியும் அப்பெண்ணிடமிருந்து ரூ.1.50 லட்சத்திற்கும் மேல் வாங்கியுள்ளார்.
நாட்கள் செல்லச் செல்ல ஜோதிடரின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால், சந்தேகமடைந்த அப்பெண் தீர விசாரித்தபோது, அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண், நியாயம் கேட்டபோது, உயரதிகாரிகள் மற்றும் முக்கியப் புள்ளிகள் எனக்குத் தெரியும் எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
தனது வாழ்க்கையைச் சீரழித்து, பணத்தை ஏமாற்றி, கொலை மிரட்டல் விடுத்த ஜோதிடர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, தனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் தனிப்பிரிவு, டி.ஜி.பி. அலுவலகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும், இந்த ஜோதிடர் பல பெண்களிடம் இதுபோன்று பணம் பறித்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வந்ததாகவும் புகார்கள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஜோதிடரிடம் கேட்டபோது, தனக்கு எதிராக அளிக்கப்பட்ட பாலியல் ரீதியிலான புகாரில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்றும், அதனை சட்டரீதியாக எதிர்கொள்ள காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், புகார் அளித்துள்ள பெண் யார் என்ற விவரம் கூட தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.





