கோவை: கேரள மக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஓணம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் ஓணம் என்பது ஒரு நாள் மட்டும் கொண்டாடக்கூடிய பண்டிகை கிடையாது. அத்தம் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்கள், கேரளா முழுவதுமே ஓணம் பண்டிகை களைகட்டும்.
மன்னர் மகாபலி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களை காண வருகிறார் என்ற நம்பிக்கையுடன் கொண்டாடப்படும் இந்த ஓணம் பண்டிகை, கேரள மக்களின் கலாச்சாரம், பாரம்பரியம், ஒற்றுமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் முக்கியமான திருவிழாவாக இருக்கிறது.
இந்த திருவிழா நடைபெறும் 10 நாட்களும் கேரள மக்கள் தங்கள் வீட்டின் வாசலில் விதவிதமான பூக்களால் பூக்கோலம் போட்டு, திருவோணம் நாளில் அதை இன்னும் பிரம்மாண்டமாக்குவார்கள்.

மேலும், கேரள பாரம்பரிய உடையணிந்து, வெவ்வேறு போட்டிகளில் கலந்து கொள்வது, பாடல், நடனம் உள்ளிட்ட பல்வேறு விதமான கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். முக்கியமாம குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பல்வேறு வகையான கேரள பாரம்பரிய உணவுகள் பரிமாறி ஓண சத்யா சாப்பிடுவதும் வழக்கமாக உள்ளது.
கோவை மாவட்டம் கேரளாவுக்கு அருகில் இருக்கும் ஒரு மாவட்டமாக இருப்பதால், கேரளாவுக்கும் கோவைக்கும் இடையே நீண்ட காலமாகவே வர்த்தகம், வேலைவாய்ப்பு, கல்வி என பல்வேறு வகையில் தொடர்பு இருந்து வருகிறது.

அதனால் கோவையில் வசிக்கும் மலையாள மக்களும் ஓணம் பண்டிகையின்போது, தங்களுடைய பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் இங்கேயே உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாகவே கோவையில் உள்ள பல்வேறு கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் மலையாள சமூகத்தினரும் இணைந்து ஓணம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
திருவோணத்தின் ஒருபகுதியாக கோவை சித்தாப்புத்தூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கேரள பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில், சபரிமலை வழிபாட்டு முறைகளுடன் ஒத்த நடைமுறைகளும், மரபுகளும் கடைபிடிக்கப்படுவதால், இக்கோயில் தமிழ்நாட்டின் சபரிமலை என்று கூட அழைக்கப்படுகிறது.
இந்திக்கோயிலில் காலை முதலே ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கோயிலில் வழிபாட்டை முடித்த பிறகு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து ஓனம் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதோடு ஓணம் சத்யா உணவை சாப்பிட உள்ளதாக மலையாள மக்கள் ஆர்வத்துடன் தெரிவித்தனர்.
கேரளாவில் தொடங்கிய ஓணம் பண்டிகையின் கொண்டாட்டம், கேரள எல்லையை கடந்து கோவையிலும் அதே உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.
பாரம்பரியத்தை பாதுகாத்துக்கொண்டே, தாங்கள் வாழும் இடத்திலும் ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மக்களின் இந்த கொண்டாட்டம், கோவை மற்றும் கேரளாவுக்கு இடையிலான நீண்டகால கலாச்சார தொடர்பையும் வெளிப்படுத்தியுள்ளது.





