கோவை: தனது குட்டி யானைகள் பாதுகாப்பாகச் சாலையைக் கடந்து செல்லும் வரை வாகனங்களை முன்னோக்கிச் செல்ல விடாமல் வழிமறித்து பாதுகாப்பு அரணாக நின்ற காட்டு யானையின் தாய் பாச காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவையில் இருந்து காரமடை வழியாக நீலகிரி மாவட்டத்திற்குச் செல்லும் வெள்ளியங்காடு – முள்ளி சாலை அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி சாலையைக் கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் குடும்பத்துடன் காரில் பயணித்த ஒருவர் பில்லூர் அணை அருகே சென்றபோது, ஒற்றைக் காட்டு யானை ஒன்று சாலையை மறித்து நின்றதை கண்டுள்ளார். இதையடுத்து அவர் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
Also Read: ஆனைக்கட்டியில் 8 ரிசார்ட்டுகளுக்கு மீண்டும் நோட்டீஸ்! சீல் வைக்கப்படுமா?
சிறிது நேரத்தில் வனப்பகுதியில் இருந்து 4 குட்டி யானைகள் சாலையைக் கடந்து சென்றுள்ளன. குட்டிகள் அனைத்தும் பாதுகாப்பாக மறுபுறம் உள்ள வனப்பகுதிக்குள் செல்லும் வரை, அந்த யானை காரை முன்னோக்கிச் செல்ல விடாமல் சாலையிலேயே நின்றுள்ளது.
குட்டிகள் பாதுகாப்பாகச் சென்றதை உறுதி செய்த பிறகு, அந்த யானை சாலையில் இருந்து விலகி குட்டிகளுடன் வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. இந்த நெகிழ்ச்சியான காட்சியை காரில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Also Read: கோவையில் குரூப் 2/2a தேர்வுக்கு இலவச பயிற்சி- விவரங்கள் இதோ…
இதுகுறித்து காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், “வெள்ளியங்காடு – முள்ளி சாலையில் மாலை 6 மணிக்கு மேல் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வறட்சி காரணமாக வனவிலங்குகள் சாலையைக் கடக்கும் வாய்ப்பு உள்ளதால், மலைப்பாதையில் பயணிப்போர் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும்” என்றார்.
மேலும், வனவிலங்குகளைக் கண்டால் அவற்றை துன்புறுத்தவோ, செல்ஃபி எடுக்கவோ, விரட்டவோ கூடாது என்றும், விதிமுறைகளை மீறுவோர் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.





