கோவை: கோவையில் டெங்கு, மலேரியா கொசுக்களை கட்டுப்படுத்த மாநகராட்சியின் புதிய முயற்சியாக கம்பூசியா மீன்கள் களமிறக்கப்பட உள்ளன.
கோவை மாநகரில் டெங்கு மற்றும் மலேரியா பாதிப்பை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும் கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் கொசுப்புழுக்களை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த கம்பூசியா மீன்கள் பயன்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கொசுப்புழு ஆய்வுகளில் பல இடங்களில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்படியென்றால் கம்பூசியா மீன் என்றால் என்ன?
சிறிய அளவில் காணப்படும் இந்த மீன்கள், நீரில் உள்ள கொசுப்புழுக்களை உணவாக உட்கொள்ளும் தன்மை கொண்டவை.
இதனால் கொசுக்கள் பெருகும் நீர்நிலைகளில் இந்த மீன்களை விடுவதன் மூலம், கொசுப்புழுக்களின் எண்ணிக்கையை இயற்கையான முறையில் குறைக்க முடியும். ஒரு வளர்ந்த கம்பூசியா மீன் ஒரு நாளைக்கு சுமார் 100 முதல் 300 கொசுப்புழுக்கள் வரை உணவாக உட்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை கல்வீரம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் கம்பூசியா மீன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஒரு கிணற்றில் 2 ஆண் மற்றும் 8 பெண் மீன்கள் என்ற விகிதத்தில் மீன்கள் விடப்படுகின்றன.
முதற்கட்டமாக மேற்கு மண்டலத்தில் கொசுப்புழுக்கள் அதிகம் காணப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, 20-க்கும் மேற்பட்ட கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் கம்பூசியா மீன்கள் விடப்பட்டுள்ளன.
மாநகரம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் கம்பூசியா மீன்களை மாநகரைச் சுற்றிலும் உள்ள நீர்நிலைகளில் விட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மீன்கள் சிறிய பிளாஸ்டிக் டப்பாக்களில் தனித்தனியாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மீன்கள் விடப்பட்ட கிணறு மற்றும் நீர்நிலைகளில் பிளீச்சிங் பவுடர், ஆயில் உள்ளிட்டவற்றை தெளிக்கக் கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கம்பூசியா மீன்களின் செயல்பாட்டை பாதிக்காமல் இருந்தால் மட்டுமே, அவை தொடர்ந்து கொசுப்புழுக்களை கட்டுப்படுத்த உதவும்.
டெங்கு பரவலை தடுக்க வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவது, கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளுடன், கம்பூசியா மீன் திட்டமும் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
கோவை மாநகராட்சியில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.





