கோவை : காரமடை அருகே வெள்ளியங்காடு பகுதியில், கடும் வெயிலின் தாக்கத்தை தணிக்க இரண்டு காட்டு யானைகள் குட்டையில் நீண்ட நேரம் குளித்த காட்சி வைரலாகி வருகிறது. பின்னர் விளைநிலங்களுக்குள் புகுந்த யானைகள் பயிர்களை சேதப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றன.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்த வெள்ளியங்காடு பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள், சிறுத்தைகள், புலிகள், கரடிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதனால் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வனவிலங்குகள் அவ்வப்போது வெள்ளியங்காடு பகுதிக்குள் வருவது வழக்கமாக உள்ளது.
தற்போது கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததால், வனப்பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவைத் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காரமடை வனச்சரகப் பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள குட்டையில் நீண்ட நேரமாக குளித்துள்ளன. கடும் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் குட்டையில் இறங்கிய யானைகள், தண்ணீரில் நீண்ட நேரம் தங்கி குளித்து மகிழ்ந்தன.
இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், யானைகளை சத்தமிட்டு அங்கிருந்து விரட்ட முயன்றனர். பின்னர் இரண்டு யானைகளும் மெதுவாக குட்டையில் இருந்து வெளியேறி, அருகிலிருந்த விளைநிலங்களுக்குள் புகுந்தன. அங்கு பயிர்களை சேதப்படுத்திய பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.
VIDEO
காட்டு யானைகள் குட்டையில் குளித்துக்கொண்டிருந்த காட்சியை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இரண்டு காட்டு யானைகள் நீண்ட நேரம் குட்டையில் குளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





