கோவை: கோவையில் மலேசியா சுற்றுலா பயணிகளை தாக்கிய இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவையில் மலேசிய சுற்றுலா பயணிகளை அரிவாளால் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மலேசியா நாட்டைச் சேர்ந்த லோகநாதன்(52) மகன் யுகேந்திரன்(21) மற்றும் உறவினர்கள் என 10 பேர் சுற்றுலாவுக்காக கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்திருந்தனர்.
இவர்கள், கடந்த 2-ம் தேதி தனியார் சுற்றுலா வேனில் சென்னையில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்று விட்டு, மீண்டும் சென்னை திரும்பி வந்த போது, கோவை நவக்கரை அருகே பெட்ரோல் பங்க்கில் இரண்டு பேர் தகராறில் ஈடுப்பட்டனர். அப்போது லோகநாதன் மற்றும் யுகேந்திரன் ஆகிய இருவரை அந்த நபர்கள் அரிவாளால் தாக்கினர்.
மேலும் வேனை துரத்தி சென்ற பொழுது துப்பாக்கி போன்ற ஆயுதத்தை காட்டியதாக கூறப்படும் நிலையில் வேனின் ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார் அதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் மதுக்கரை பகுதியில் சாலையோரம் மோதி நின்றது. பின்னர் அங்குள்ள மக்கள் கூடியதால் இருசக்கர வாகனத்தில் விரட்டி வந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலிஸார் மற்றும் க.க.சாவடிபோலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார் அங்கு சென்று ஆகாஷ் என்ற இளைஞரை பிடித்து கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





