கோவை: மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வென்று கோவை திரும்பிய மாணவிகளுக்கு மேளதாளம் முழங்க பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
சி.பி.எஸ்.சி. பள்ளிகளிடையே மாநில அளவிலான கைப்பந்துப் போட்டி தென்காசியில் உள்ள வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 80-க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.சி. பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் பங்கேற்ற கோவை சி.எஸ். அகாடமி மாணவிகள், இறுதிப் போட்டிக்குள் நுழைந்து, 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடத்தையும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மூன்றாமிடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.

இதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் முதல் பரிசை வென்ற மாணவிகள் அடுத்த மாதம் பஞ்சாபில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இதனிடையே, வெற்றிக் கோப்பையுடன் இன்று பள்ளிக்கு திரும்பிய மாணவிகளுக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெற்றோர்களும், பள்ளி ஆசிரியர்களும் திரண்டு மாணவிகளுக்கு பூங்கொத்துகள் கொடுத்து நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து கைப்பந்து அணிகளின் கேப்டன்கள் சமிக்ஷா ஸ்ரீனிவாசன், நக்ஷத்திரா சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விடுமுறை, தேர்வு காலத்திலும் கடுமையான பயிற்சியை மேற்கொண்டோம். பள்ளி தரப்பிலும், பெற்றோர் தரப்பிலும் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தனர். அதனால் தான் இந்தக் கோப்பையை வெற்றி பெற முடிந்தது. அடுத்து தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெறுவதற்கும் முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம்” என்றனர்.
சி.எஸ். அகாடமி முதல்வர் ஸ்மிதா பாபுராஜ் கூறுகையில், “கோப்பையுடன் திரும்பியுள்ள மாணவிகளை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
பெற்றோர்களுள் ஒருவரான முனைவர் கவிதா கூறுகையில், “சி.எஸ். அகாடமி மாணவிகள் 23 பேர் இந்தப் போட்டியில் பங்கேற்று, மாநில அளவில் பெரிய சாதனை படைத்துள்ளனர். பயிற்சியாளர்கள் மோகன், நிவேதா, சக்தி ஆகியோரின் தொடர் முயற்சி எங்கள் குழந்தைகளுக்கு கோப்பையைப் பெற்றுக் கொடுத்துள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் தருகிறது” என்றார்.





