கோவை: கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
குறிப்பாக, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முதலில் Pay Scale மாற்றி பின்னர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியர்களுக்கு இணையான பணப்பலன்களை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
பணி முற்றாதவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்த குறு மைய ஊழியர்களுக்கு 100 சதவீத பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
தங்களது நீண்டகால கோரிக்கைகளுக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.





