கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இ.எஸ்.ஐ தொகையை திரும்ப வழங்கக் கோரிக்கை போராட்டம் நடைபெற்று வருகிறது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக நிர்வாகத்தின் இ.எஸ்.ஐ (ESI) சட்ட மீறல் மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கு நடைபெறுவதாக கூறியும் அதனை கண்டித்தும் பாரதியார் பல்கலைக்கழகத் தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், தினக்கூலி மற்றும் தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட இ.எஸ்.ஐ பணத்தை உடனடியாகத் தொழிலாளர்களுக்குத் திரும்ப வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஊழியர்கள் கைகளில் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி பதிவாளர் அறை முன்பாக அமர்ந்து தீவிர உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பல்கலைக்கழகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.





