கோவை: கோவையில் ஆடிட்டர் வீட்டில் பல லட்சம் வெள்ளி, ரொக்கம் திருடிய நபரை போலிசார் கைது செய்தனர்.
கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஓய்வுபெற்ற ஆடிட்டர் வீட்டின் கதவை உடைத்து வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபரை, ஒரே வாரத்தில் கோவை மாநகரக் காவல் துறையினர் கைது செய்து பொருட்களையும் மீட்டு உள்ளனர்.
கோவை மாநகரம், R.S.புரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெங்கடாசலம் காலனி, ராபர்ட்சன் ரோட்டைச் சேர்ந்தவர் வி.ஆர்.சூரியநாராயணன் (76). ஆடிட்டராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி இரவு, இவரது மகன் வெளியூர் சென்று இருந்த நிலையில், ஆடிட்டர் சூரியநாராயணன் தனது மனைவியுடன் தரைத்தள படுக்கை அறையிலும், அவரது மருமகள் மற்றும் பேத்தி முதல் தளத்திலும் தூங்கச் சென்று உள்ளனர். வீட்டின் இருபுற கதவுகளையும் உள்புறமாகத் தாளிட்டு உறங்கச் சென்றனர்.
மறுநாள் காலை (செப்டம்பர் 1) வழக்கம் போல் எழுந்து வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்கக் கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, ஹாலை ஒட்டி இருந்த பூஜை அறை மற்றும் அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன.
அங்கு இருந்த வாட்ரோப்பில் வைக்கப்பட்டு இருந்த வெள்ளி குத்துவிளக்குகள், சிறிய வெள்ளி விளக்குகள், வெள்ளி டம்ளர்கள், கிண்ணங்கள் மற்றும் சிறிய இரும்பு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரொக்கப் பணம் ரூ.40,000/- மற்றும் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த அபூர்வ பழைய நாணயங்கள் அனைத்தும் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஆடிட்டர் சூரியநாராயணன் அளித்த புகாரின் பேரில், R.S.புரம் புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கோவை மாநகரக் காவல் ஆணையர் மற்றும் தெற்குப் பகுதி காவல் துணை ஆணையர் ஆகியோரின் நேரடி உத்தரவின் பேரில், குற்றவாளியைப் பிடிக்கச் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் தடய சேகரிப்பு மற்றும் புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் முடிவில், இந்த திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி குணசீலன் (54), என்பவரைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
கைதான குணசீலன் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆடிட்டர் வீட்டில் திருடப்பட்ட ரூ.3,00,000/- மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.30,000 ரொக்கப் பணத்தை B2 ஆர்.எஸ்.புரம் தனிப்படை போலீசார் பத்திரமாகக் கைப்பற்றினர்.
தொடர்ந்து குற்றவாளி குணசீலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.





