கோவை: கோவையில் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் விடுதிகளில் சிலம்பம் மற்றும் கராத்தே அடிப்படைப் பயிற்சி அளிப்பதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளிமற்றும் கல்லூரி மாணவியருக்கு கராத்தே, சிலம்பம் ஆகிய தற்காப்புக்கலையில் அடிப்படைப்பயிற்சி அளிக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கராத்தே அடிப்படை பயிற்சியினை 3 மாதங்களுக்கு ஒரு வாரத்திற்கு 3 பயிற்சிகள் வீதம் 36 பயிற்சிகள் அளிக்க வேண்டும், சிலம்பம் அடிப்படை பயிற்சியினை 2 மாதங்களுக்கு ஒரு வாரத்திற்கு 3 பயிற்சிகள் வீதம் 24 பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
இதற்கு குறைந்தபட்சம் 10 ஆம்வகுப்பு முடித்திருக்க வேண்டும், தொழிற்நுட்பக் கல்வித்தகுதிகள் கராத்தே சான்றிதழ் பயிற்சி (Certificate course) பட்டயப்பயிற்சி (Diploma course), 1 ஆண்டு முதுநிலை பட்டயப்படிப்பு (P.G. in Diploma), சிலம்பம் தற்காப்பு கலை பயிற்சியினை பொறுத்தவரை கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்துள்ள மற்றும் அத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக இருப்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கராத்தே மற்றும் சிலம்பம் அடிப்படை பயிற்சி வழங்க தேர்ந்தெடுக்கும் நிறுவனமானது அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி வழங்கிய அனுபவம் இருக்க வேண்டும்.
கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சியினை வழங்கும் நிறுவனத்திடம் இருந்து விண்ணப்பங்கள் கோயம்புத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் 15.09.2026 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.





