கோவை : திருப்பூரில் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவன் ஹரிஹரனின் சொந்த கற்றல் அனுபவத்தில் இருந்து உருவான ‘ஹிட் லேர்ன்’ என்ற AI அடிப்படையிலான கற்றல் செயலியின் தொடக்க விழா கோவையில் நடைபெற்றது.
கோவை மருதமலை சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவன் ஹரிஹரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
8-ம் வகுப்பு விடுமுறையின்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மீது தனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து கோவையில் உள்ள ஹோம் ஐடியாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் கோடிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை கற்கத் தொடங்கியதாகவும் தெரிவித்தார்.
அப்போது தனது சொந்த கற்றல் அனுபவத்தில் இருந்த ஒரு சிக்கலை அடையாளம் கண்டதாக கூறினார். மாணவர்கள் ஒருபுறம் டியூஷன் வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய நிலையும், மறுபுறம் படிக்கும்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு உடனடியாக விளக்கம் பெற முடியாத சூழலும் இருப்பதை உணர்ந்ததாக தெரிவித்தார்.

இதனால், படிக்கும் நேரத்தில் ஏற்படும் சந்தேகங்களை உடனடியாக கேட்டு விளக்கம் பெறக்கூடிய AI இருந்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனை தனக்கு ஏற்பட்டதாகவும், அதன் அடிப்படையில் மாணவர்கள் தாங்களாகவே பாடங்களைக் கற்றுக்கொண்டு, புரியாதவற்றை குரல் மூலம் கேட்டு உடனடியாக விளக்கம் பெறும் செயலியை உருவாக்கும் யோசனை உருவானதாகவும் கூறினார்.
தனது யோசனையை அடிப்படையாகக் கொண்டு, தான் கோடிங் கற்ற நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினருடன் இணைந்து செயலியின் தொழில்நுட்ப அம்சங்களை உருவாக்கியதாக தெரிவித்தார்.
மேலும், தனது தேவையை விளக்குவது, செயலி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான கருத்துகளை பகிர்வது, ஒரு யோசனை தொழில்நுட்ப தயாரிப்பாக மாறும் செயல்முறையை புரிந்துகொள்வது என அதன் உருவாக்கப் பயணத்திலும் பங்கேற்றதாக கூறினார்.
தற்போது தனது ஆரம்பகட்ட சிந்தனை ‘ஹிட் லேர்ன்’ செயலியாக உருவாகியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த செயலியில் மாணவர்கள் தங்களது வகுப்பைத் தேர்வு செய்து கற்றல் வீடியோக்களை பார்க்கலாம். பாடம் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டால், அதனை குரல் மூலம் கேட்டு AI உதவியுடன் விளக்கம் பெறும் வசதியும் உள்ளது.
மேலும், மாணவர்கள் கற்றுக்கொண்டதை சோதிக்கும் வகையில் வினாடி வினாக்கள், புதிர்கள், Voice-to-Voice கேள்வி–பதில் வசதி, பல்மொழி ஆதரவு, AI அடிப்படையிலான கற்றல், ஊடாடும் மதிப்பீடுகள் உள்ளிட்ட அம்சங்களும் செயலியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்கும் வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் கற்றல் திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த செயலி உதவும் என எதிர்பார்ப்பதாகவும் ஹரிஹரன் தெரிவித்தார்.





