கோவை : கோவை மருதமலை அடிவாரம் பகுதியில் அதிகளவில் மது அருந்தியதாக கூறப்படும் கூலித் தொழிலாளி ஒருவர், வீட்டின் அருகே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மருதமலை அடிவாரம் மகாத்மா காந்தி ஹவுசிங் யூனிட் தொழுநோய் காலனியைச் சேர்ந்தவர் ரங்கராஜன் (33). கூலித் தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் ரங்கராஜன் அதிகளவில் மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அவரை மயங்கிய நிலையில் பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவர் வீட்டில் இருந்துள்ளார்.
இதற்கிடையில், மாலை நேரத்தில் ரங்கராஜனின் மனைவி சுமதி (30) மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பியபோது, ரங்கராஜன் சுயநினைவின்றி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரங்கராஜனை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு ரங்கராஜனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து, ரங்கராஜனின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது உடல் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.





