கோவை : கோவையில் ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக் கூறி வாலிபரிடம் ரூ.5.10 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஒத்தக்கால்மண்டபம் டி.ஏ.எஸ். நகரைச் சேர்ந்த 27 வயது வாலிபர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைனில் பகுதிநேர வேலை தேடி வந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரை தொடர்புகொண்டு, கூகுள் மேப்பில் குறிப்பிட்ட இடங்களுக்கு ரிவ்யூ வழங்கும் ஆன்லைன் பகுதிநேர வேலை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய வாலிபரை, மர்ம நபர்கள் டெலிகிராம் குழுவில் இணைத்துள்ளனர். தொடர்ந்து, சில எளிய டாஸ்க்குகளை வழங்கியுள்ளனர். அந்த டாஸ்க்குகளை முடித்ததற்காக ரூ.500, ரூ.1,000, ரூ.5,000 என சிறிய தொகைகளை அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனர்.
பின்னர், அடுத்தகட்ட டாஸ்க்குகளை பெற குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்றும், டாஸ்க்குகளை முடித்ததும் முதலீடு செய்த பணத்துடன் கூடுதல் தொகையையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
இதனை உண்மை என நம்பிய அந்த வாலிபர், மர்ம நபர்கள் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.5 லட்சத்து 10 ஆயிரம் அனுப்பியுள்ளார்.
ஆனால், அதன் பின்னர் அவருக்கு எந்த பணமும் திரும்ப வரவில்லை. இதையடுத்து மர்ம நபர்களை தொடர்புகொண்டு பணத்தை திரும்ப கேட்டபோது, மேலும் பணத்தை முதலீடு செய்யுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.
அப்போதுதான் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த வாலிபர், இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்குகள் மற்றும் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





