கோவை : கோவை அருகே தனது மனைவியின் கள்ளக்காதலன் 13 வயது மகன் மற்றும் 6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், குழந்தைகளை தாக்கி மிரட்டியதாகவும் கூறி, அவர்களின் தந்தை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த 40 வயது நபர் பெங்களூரில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது 2 குழந்தைகளுடன் நேற்று கோவை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், தனது மனைவி மற்றும் 13 வயது மகன், 6 வயது மகளுடன் வசித்து வந்ததாகவும், இந்த நிலையில் தனது மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முரளிதரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பழக்கத்திற்கு இடையூறாக இருந்ததாக கூறி, தனது மகன் மற்றும் மகளுக்கு முரளிதரன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அடிக்கடி குழந்தைகளை தாக்கி துன்புறுத்தியதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், குழந்தைகளுக்கு ஏற்பட்ட கொடுமைகளை தனது மகன் செல்போனில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும், இதை அறிந்த முரளிதரன் தனது மகனை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் இருந்து விடுமுறைக்காக வந்தபோது குழந்தைகள் தங்களிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்ததாகவும், இதனால் அதிர்ச்சியடைந்து குழந்தைகளிடம் விசாரித்ததாகவும் அந்த தந்தை கூறியுள்ளார்.
இதையடுத்து, ஆதாரங்களுடன் சூலூர் போலீசில் புகார் அளித்தும் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்றும், குழந்தைகள் நலக் குழுவிடமும் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, முரளிதரனின் தாயார் தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக ரூ.5 லட்சம் வரை லஞ்சம் கொடுத்துள்ளதாக கூறி தன்னை மிரட்டி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, தனது மனைவி, முரளிதரன் மற்றும் அவரது பெற்றோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்றும், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட எஸ்.பி.யிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.





