கோவை : கோவை குனியமுத்தூர் அருகே வாடகை வீட்டில் கதவை பூட்டாமல் தூங்கிய கல்லூரி மாணவர்களின் அறைக்குள் புகுந்த மர்ம நபர்கள், 4 லேப்டாப்கள் மற்றும் 3 விலை உயர்ந்த செல்போன்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் கிழக்கு, பி.கே.புதூர் இ.பி. காலனி பகுதியில் உள்ள வாடகை வீட்டில் ஜெயதர்ஷன் (19) என்பவர் நண்பர்களுடன் தங்கி, தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.டெக் படித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் ஜெயதர்ஷன் மற்றும் அவரது நண்பர்கள் படிப்பை முடித்துவிட்டு தூங்கச் சென்றுள்ளனர். அப்போது ஜெயதர்ஷன் களைப்பு காரணமாக வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கியதாக கூறப்படுகிறது.
அதிகாலை 4 மணியளவில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அறையில் இருந்த பொருட்களை சோதனை செய்தபோது, 4 லேப்டாப்கள் மற்றும் 3 விலை உயர்ந்த செல்போன்கள் காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து ஜெயதர்ஷன் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் நடமாடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், திருட்டில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.





