கோவை: முதல்வரின் சட்டசபை பேச்சை கண்டித்து ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர்கள் துரை செந்தமிழ் செல்வன், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தமிழக சட்டமன்றத்தில், முதல்வர் விஜய் பேசும் போது முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை பற்றி விமர்சித்ததாக கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக தாடையை தட்டி பேசியது சர்ச்சைக்கு உள்ளானது.
இந்நிலையில் அதனை கண்டித்து, கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கோவை எம்பி கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, எம்எல்ஏ சுதாகர், தீர்மானக்குழு செயலாளர் நா.கார்த்திக், துணைமேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் கண்டன உரையாற்றுகையில்,
இந்த ஆர்ப்பாட்டம், உணர்வுபூர்வமான ஆர்ப்பாட்டம், தலைவரை மட்டும் அல்ல சிந்தாந்தத்தை விஜய் கொச்சைப்படுத்தி உள்ளார். நடிகர், கூத்தாடி உங்களை போல எங்கள் தலைவர் சினிமா பார்த்து வந்தவர் அல்ல. நீங்கள் கோர்டு சூட் போட்டு வந்தாலும் எந்த உருவத்தில் வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது.
முதல்வர் என்று சொல்லக்கூடிய தகுதியே இல்லாதவர் விஜய். சட்டமன்றத்தில் சட்ட ஒழுங்கு தொடர்பான கேள்விக்களுக்கு பதில் சொல்ல முடியாத முதல்வர், கோமாளி அமைச்சர்களை வைத்து ஆட்சி நடத்தி வரும் விஜய்யால் தொழில் வளர்ச்சி முடங்கி உள்ளது. எங்கள் கூட்டணியில் வெற்றி பெற்றவர்களின் தயவால் ஆட்சி நடத்தி வரும் விஜய் “மாப்ள நீங்களாக இருக்கலாம்” ஆனால் நீங்கள் போட்டுள்ள சர்ட் எங்க சர்ட் என கூறினார்.
வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி பேசுகையில் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதானபோது, விஜய் பிறக்கவே இல்லை. நம்ம மக்களுக்கு தமிழை கற்று கொடுத்துள்ளார். விஜய்யின் அப்பா, பெண்களுக்கு எப்படி சோப்பு போடுவது என கற்றுக்கொடுத்துள்ளார்.
வரும் இடைத்தேர்தலில் நமது பலத்தை காட்டுவோம் என்றார்.தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் பேசுகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு சம்மட்டி அடி கொடுப்போம் என்றார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜயை கண்டித்து பாதாகைகள் ஏந்தியவாறு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.





