கோவை : அல்கொய்தா சித்தாந்த ஆதரவு கொண்டதாக கூறப்படும் ஆன்லைன் குழுவுடன் தொடர்பில் இருந்ததாக 19 வயது இளைஞரை கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து, உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிடுவதாக அம்மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஆசம்கர் பகுதியை சேர்ந்த முகமது நபீல் என்பவரை கடந்த 12-ம் தேதி கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த மக்சூத் அலி என்பவர் ஆன்லைன் தொடர்புகளுக்காக பிரத்யேக செயலிகளை உருவாக்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மக்சூத் அலி குறித்து விசாரணை நடத்தியதில், அவர் உத்தரபிரதேசத்தில் இருந்து கோவைக்கு வந்து, ஹோப் காலேஜ் பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், கோவையில் தங்கியிருப்பது குறித்து உத்தரபிரதேச ATS போலீசார், கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பெங்களூரு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த மக்சூத் அலியை கோவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து, மக்சூத் அலியை போலீசார் லக்னோவுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டதாக கூறி, UAPA எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மக்சூத் அலி “CAPTAIN M NETWORK” என்ற பிரத்யேக செயலியை உருவாக்கி, அதன் மூலம் முகமது நபீல் உள்ளிட்ட சிலருடன் தொடர்பில் இருந்ததாகவும், அவரது இரண்டு வாட்ஸ்அப் எண்களில் பாகிஸ்தானை சேர்ந்த எண்கள் இடம்பெற்றிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
கோவையில் மக்சூத் அலிக்கு வேறு யாருடனும் தொடர்பு இருந்ததா, அவர் கோவைக்கு வந்ததற்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் உத்தரபிரதேச ATS போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





