கோவை: கோவையில் Periyar Walk நடை பேரணி நடைபெற்றது.
கோவையில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகம் சார்பில் Periyar Walk எனும் சமூகநீதி சமத்துவத்திற்கான நடை பேரணி நடைபெற்றது.
தந்தை பெரியாரின் 148 வது பிறந்த நாள் 17ம் தேதி கொண்டாடப்பட்டது. பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு வார காலமாக பல்வேறு பகுதிகளில் பெரியார் அமைப்புகள் திராவிடர் அமைப்புகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெரியாரின் கொள்கைகள் பொதுமக்களிடையே எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று கோவையில் திராவிடர் கழகம் சார்பில் Periyar Walk எனும் சமூகநீதி- சமத்துவத்திற்கான நடை பேரணி நடைபெற்றது. வ உ சி மைதானத்தில் துவங்கிய இந்த பேரணி நேரு விளையாட்டு அரங்கம் அருகே நிறைவுற்றது.
இதனை ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கானோர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்று அமைதியாக பேரணி மேற்கொண்டனர்.





