கோவை: கோவையில் நடைபெறும் மூத்தோர் தடகளப் போட்டியில் முதியோர் அசத்தினர்.
கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோவை மாவட்ட மூத்தோர் தடகள போட்டிகள் இன்று நடைபெற்று வருகிறது.
நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வேகமான நடை, என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான முதியோர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் குண்டு எறிதல், நீளம் தாண்டுதலில் தாத்தா பாட்டிகள் பங்கேற்று விளையாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
குண்டு எறிதல் போட்டியில் சுமார் 50- 60 வயது போட்டியாளர்கள் பங்கேற்ற போதிலும் ஞான ஹெப்சிபா(87), அம்மாக்குட்டி (83), கோவிந்தம்மாள் (85) ஆகிய 80 வயதிற்கும் மேற்பட்ட பாட்டிகள் கலந்து கொண்டு குண்டு எறிந்தது அங்குள்ளவர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதேபோன்று 60 வயதிற்கும் மேற்பட்ட தாத்தாக்கள் லாங் ஜம்ப் செய்து திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த போட்டியில் பங்கேற்ற பலரும் முன்னாள் தடகள வீரர்கள் உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.





