கோவை: கோவையில் உள்ள தனியார் ஆலையில் உள்ள ஆயில் டேங்க்கில் விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய் சவுத்ரி (42). இவர் கடந்த 10 ஆண்டுகளாக கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது மகன் கவுதம் (22) என்பவரையும் வேலைக்கு அழைத்து வந்தார். இருவரும் தொழிற்சாலை வளாகத்தின் எதிரே உள்ள அறையில் தங்கி இருந்தனர்.
Advertisement

கடந்த 2ம் தேதி தந்தையும், மகனும் வழக்கம்போல வேலைக்கு சென்றனர். பின்னர் சோர்வு காரணமாக சஞ்சய் சவுத்ரி தனது அறைக்கு திரும்பினார். அப்போது கவுதம் அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்.
திடீரென எதிர்பாராமல் 10 அடி ஆழமுள்ள ஆயில் டேங்க்கில் கவுதம் தவறி விழுந்தார். சத்தம் கேட்டு சஞ்சய் சவுத்ரி மற்றும் மற்ற ஊழியர்கள் விரைந்து சென்று ஆயில் டேங்க்கில் இருந்து உடனடியாக அவரை மீட்டனர்.
அவர் முதலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சஞ்சய் சவுத்ரி சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் ஊழியரை அஜாக்கிரதையாக உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணிக்கு அமர்த்தியதாக தொழிற்சாலை உரிமையாளர் சுந்தரம், அவரது மகள் கீதாஞ்சலி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.