கோவை: கோவையில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர்கள், நேற்று சுற்றுலா பஸ்சில் கோவை வந்தனர்.
அவர்கள் மருதமலை, மாசாணியம்மன் ஆகிய கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு சேலம் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பஸ் அவிநாசி ரோடு சித்ரா அருகே நள்ளிரவு ஒரு மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது பஸ்சின் டயர் திடீரென வெடித்தது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திடீரென கவிழ்ந்தது. பஸ்சில் பயணம் செய்த 27 பேர் உள்ளே சிக்கி கொண்டனர்.
அதில் 9 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள், போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் காயம் அடைந்த 9 பேரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் அவர்கள் வேறு பஸ்சில் சேலம் புறப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மீட்பு வாகனத்தை வரவழைத்து கவிழ்ந்த பேருந்தை மீட்டனர்.