கோவை: கோவையில் நான்கரை வயது குழந்தையை, பெற்ற தாயே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி என்ற இளம் பெண். கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் தனது நான்கரை வயது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று மதியம் அவரது நான்கரை வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு இருந்த தமிழரசியைப் பிடித்து வந்து கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள கோவை மாநகர கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது குழந்தை அழுது கொண்டிருந்ததாகவும், தான் அடித்ததால் குழந்தை இறந்து விட்டதாகவும் தமிழரசி தெரிவித்துள்ளார்.
மேலும், கட்டிட வேலைக்குச் சித்தாளாகச் சென்று வரும் நிலையில் அங்கு தமிழரசிக்கு வசந்த் என்பவருடன் பழக்கம் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
குழந்தை கழுத்தை நெறித்து படுகொலை செய்யப்பட்டிருப்பதால், திருமணத்தை மீறிய உறவுக்காக குழந்தையைக் கொன்றாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நான்கரை வயது பிஞ்சுக் குழந்தையை பெற்ற தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் இருகூர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.