கோவை: சுந்தராபுரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து இரவு மதுவுடன் கோழிக்கறி சாப்பிட்ட வாலிபர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேல நாட்டாமங்கலம், வாஞ்சி நகரை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் அறிவு (வயது 34).
இவர் சுந்தராபுரம், அருகே மதுக்கரை ரோட்டில் உள்ள காமராஜர் நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.
இதற்காக அங்கேயே தங்கி இருந்தார். சம்பவத்தன்று இரவு அறிவு தங்கி இருந்த இடத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார்.
அப்போது கோழி இறைச்சி சாப்பிட்டுள்ளார். இரவு 11 மணிக்கு பிறகு அனைவரும் சென்றுவிட்டனர்.அதன் பிறகு அறிவு அங்கேயே தூங்கி உள்ளார்.
தொடர்ந்து, காலை அறிவை எழுப்ப வந்தவர்கள் அவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மதுரையில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.
அவரது தந்தை போஸ் மற்றும் குடும்பத்தினர் கோவை விரைந்து வந்தனர். இறந்து கிடந்த அறிவின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து போஸ் சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.