கோவை: கோவையை மையமாகக் கொண்டு பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் RAAC அமைப்பிற்கு தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் மக்கள் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக RAAC அமைப்பு செயல்பட்டு வருகிறது. பாஷ் (Bosch) மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து காளப்பட்டி அருகே RAAC அமைப்பினர் “நம்ம ஸ்பெஷல் பார்க்”-ஐ நிறுவினர்.
சிறப்பு குழந்தைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பூங்கா, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இங்கு வரும் குழந்தைகள், ஏட்டுக்கல்வி முறைக்கு பதிலாக, நடைமுறைக் கல்வி அனுபவத்தை பெறுகின்றனர்.
இதனிடையே, நம்ம ஸ்பெஷல் பார்க் அமைத்தமைக்காக, பன்மை (Diversity), சமத்துவம் (Equity), மற்றும் இணைவு (Inclusion) பிரிவில், 5வது சமூக தாக்க மாநாடு & விருதுகள் (SICA’25) நிகழ்வில் RAAC அமைப்பு வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

டில்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் சென்டரில் (IIC) நடைபெற்ற நிகழ்வில் RAAC அமைப்பினர் தேசிய விருதைப் பெற்றனர். பல கட்டத் தேர்வுகளுக்குப் பின் கிடைத்த இந்த விருது கோவைக்கு பெருமை சேர்த்துள்ளது.
இதுகுறித்து RAAC பிரதிநிதிகள் கூறுகையில், “இந்த விருது நமது சமூகத்திற்கு உரியது. இது எங்கள் நம்பிக்கைக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. உறுதுணையாக இருந்த தன்னார்வலர்கள், கோவை மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுக்கு எங்கள் நன்றி” என்றனர்.