கோவை: கோவை அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை ரேஷன் கடையை சேதப்படுத்தி அரிசியை சாப்பிட்டு சென்றுள்ளது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், மடத்தூர், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளில் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி வெளியேறும் காட்டு யானைகள் காட்டுபன்றிகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்வது தொடர்கதையாக உள்ளது.
காட்டு யானையை வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் கட்டுப்படுத்துவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். வனத்துறையினரும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொண்டாலும் அவ்வப்போது இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை மடத்தூர் இராமநாதபுரம் ஊருக்குள் சுற்றி திரிந்துள்ளது. மடத்தூர் பகுதிக்குள் சுற்றித்திரிந்த யானை ரேஷன் கடையை சேதப்படுத்தி அரிசியை சாப்பிட்டு சென்றுள்ளது. மேலும் ராமநாதபுரம் பகுதியில் தனியார் நபருக்கு சொந்தமான வாழை தோட்டத்தையும் சேதப்படுத்தி சென்றுள்ளது.
தற்பொழுது ரேஷன் கடையை யானை சேதப்படுத்திய காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் யானைகளும் காட்டுப்பன்றிகளும் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவதால் வனத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




