கோவை: அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தின் 4வது வெள்ளிக்கிழமையான நாளை, பெண்கள் தவறாமல் செய்ய வேண்டிய பூஜை குறித்த சிறப்பு தொகுப்பை தற்போது காணலாம்.
ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து போகும் என்பது ஐதீகமாகும். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரங்களில், கோவில்கள் மற்றும் வீடுகளில் அம்மனை பல்வேறு அலங்காரங்களில் அலங்கரித்து வழிபடுவது உண்டு.
ஆடி மாதத்தில் எத்தனையோ சிறப்பான நாட்கள் இருந்தாலும், ஆடி வெள்ளிக்கு மட்டும் எப்போதுமே தனிச்சிறப்புகள் உண்டு. இந்த நாட்களில் விரதமிருந்து, அம்மனுக்கான மந்திரத்தை சொல்லி வழிபட்டால் பயன்கள் ஏராளம்.

ஆடி வெள்ளி
கடக மாதத்தில் சூரிய பகவான் பயணிக்கும் மாதம் தான் ஆடி மாதமாகும். பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் சுகபோக வாழ்க்கைக்கும், செல்வம் மற்றும் மகிழ்ச்சிக்கு காரணமாக சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த நாளாகும். ஆடி மாதத்தில் சந்திரனும், சுக்கிரனும் இணையும் நாளாக வெள்ளிக்கிழமை இருக்கும். இந்த சமயத்தில் பெண் தெய்வங்களின் சக்தி அபரிவிதமாக காணப்படும். இதன் காரணமாகவே ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும்.
ஆடி மாதத்தில் ஆடி செவ்வாய் மற்றும் ஆடி வெள்ளி அம்மனுக்கு உகந்த நாட்களாகும். குறிப்பாக, ஆடி வெள்ளி பெண்களுக்கு முக்கியமான நாளாகும். ஆடி மாதத்தில் வரும் 5 வெள்ளிக்கிழமைகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 5 வெள்ளிக்கிழமைகளிலும் விரதம் இருக்க முடியாத பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை விரதம் இருக்கலாம்.
விரத பலன்கள்
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணம் தடையுள்ள பெண்கள் ஆடி வெள்ளிகளில் விரதம் இருக்கலாம். அதேபோல, நிம்மதியை தேடுபவர்கள், குடும்பத்தில் தீராத பிரச்சினை இருப்பவர்கள், செல்வம் தங்குவதற்கு, தீராத கடன் பிரச்சினை, அகலாத நோயால் பாதிக்கப்படுபவர்கள் ஆடி வெள்ளியில் விரதம் இருந்து வழிபட்டால், நினைத்தது நடக்கும். ஏனெனில், கேட்ட வரத்தை கொடுக்கும் மகிமை ஆடி வெள்ளிக்கு உண்டு.

விரதம் இருப்பது எப்படி?
சூரியன் உதயமாவதற்கு முன்பே எழுந்து குளித்து விட்டு, வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். பின்னர், கோவிலுக்கு சென்று வேண்டுதலை வேண்டிக்கொண்டே விளக்கேற்றுவது மிகவும் சிறப்பானது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீடுகளிலேயே மகாலட்சுமியின் படத்தை வைத்து, அதன் முன் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அம்மன் படம் ஏதுமில்லையென்றால், தீபத்தையே அம்மனாக பாவித்து விளக்கேற்றி, பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். அம்மனை மனதார வேண்டிக்கொண்டு, காலையும், மதியமும் விரதம் இருந்தால் நல்ல பலனை அளிக்கும். முடியாதவர்கள், காலை ஒரு வேளை மட்டும் சாப்பிடாமல் விரதம் இருக்கலாம்.
மந்திரங்கள்
லலிதா சகஸ்ரநாமம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்,சகலகலாவல்லி மாலை, லட்சுமி அஷ்டோத்திரம்,செளந்தர்யலஹரி, கனகதாரா ஸ்தோத்திரம் போன்ற அம்மனுக்குரிய பாடல்களை பாடி வழிபடலாம். பூக்களால் அர்ச்சனை செய்வதைவிட, இந்த மந்திரங்களாலும், ஸ்தோத்திரங்களாலும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த நிலையில், ஆடி மாதத்தின் 4வது வெள்ளிக்கிழமையான நாளை, பெண்கள் தங்கள் வீட்டில் குபேர கோல பூஜையை தவறாமல் செய்தால், வீட்டில் தரித்திரம் நீங்கி, ஐஸ்வர்யம் உண்டாகும்.

108 அர்ச்சனை
பிரபல ஜோதிடர் கூறியதாவது; 4வது ஆடி வெள்ளி தசமி திதியோடு வருகிறது. அதோடு, சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தில், உச்ச பலத்தோடு வந்து உட்கார்ந்து கொள்கிறார். சந்திரன் இருக்கும் வீடான ரிஷபத்தில் இருக்கும் சுக்கிரன் நீட்சமாக இருக்கிறார். குருவும், சந்திரனும் உச்சபலத்தோடு இருக்கிறார். இந்த நாளில் குரு, சந்திரன் யோகம் பெற்ற நாள்.சுக்கிரன் பலவீனமாக புதன் வீட்டில் இருக்கிறார். புதன் குருவோடு சேர்ந்து இருக்கிறார். இந்த மாதிரி கிரக அமைப்பில், தாமரை பூ போட்ட காப்பர் காயின்ஸை பயன்படுத்தி, மஹாலட்சுமிக்கு 108 அர்ச்சனை செய்வது ரொம்ப விஷேசம்.
விளக்கு ஏற்றி வைத்து, அதன் அடிப்பகுதியில் ஒவ்வொரு காயினையும் வைத்து அர்ச்சனை செய்வது நல்லது. அதுவும் மாலை வேளையில் செய்வது மிகவும் நல்லது.
குபேர கோல பூஜை
108 காயின் வாங்கி அர்ச்சனை செய்ய முடியாத பெண்களுக்கு இன்னொரு பூஜை முறை உள்ளது. அரிசி மாவில் குபேர கோலம் போட்டு, நம்பர் எழுதி, ஒவ்வொரு கட்டத்திற்குள்ளும் மஞ்சள், குங்குமம் வைத்து, 9 தாமரை பூ போட்ட காப்பர் காயின்ஸ் மட்டும் வாங்கி, ஒவ்வொரு கட்டத்திற்குள் வைத்து, குபேர மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால் குபேர கோல பூஜை. இதனை செய்வதற்கு, அரிசி மாவு, மஞ்சள், குங்குமம் மட்டும் போதும்.

அரிசி மாவில் ஏன் கோலம் போடுவது என்றால், பச்சரிசி சந்திரனுக்கு மிகவும் உகந்தது. எறும்புகள், பூச்சிகள் அதனை சாப்பிடும் போது, அதன் புண்ணியம் நமக்கு உண்டு. மஞ்சள் குருவுக்கானது, குங்குமம் செவ்வாய்க்கானது. சந்திரன், குரு மற்றும் செவ்வாய் ஆகிய மூன்றின் பலம் அதில் இருக்கும். தாமிரத்தால் ஆன காயினை வைத்து ஒவ்வொரு கட்டத்திற்கு 9 முறை குபேர மந்திரத்தை செய்தால், குடும்பத்திற்கு மிகவும் நல்லது.
மஹாலட்சுமிக்கு வெல்லம் போட்ட நெய் வேத்தியம் ரொம்ப நல்லது. ஆடி வெள்ளியில் புட்டு நெய் வேத்தியம் பண்ணலாம். சாம்பிராணி மற்றும் வாசனை மலர்களை வைத்து சிறப்பான அர்ச்சனை செய்யலாம். ஒரு வீட்டில் தரித்திரம் நீங்கி ஐஸ்வர்யம் வருவதற்கு இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.




