கோவை: இளைஞர்களின் வாழ்க்கை முறையாக விளையாட்டு மாற வேண்டும் என ஒலிம்பிக் நாயகன் அபினவ் பிந்த்ரா வலியுறுத்தி உள்ளார்.
நாட்டில் விளையாட்டுத் துறை அசுர வளர்ச்சி அடைந்து வருவதாகவும், இளைஞர்கள் தங்களது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விளையாட்டை ஒரு வாழ்க்கை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் ஒலிம்பிக் தங்கப் பதக்க வெற்றியாளர் அபினவ் பிந்த்ரா தெரிவித்தார்.
கோவையில் உள்ள தனியார் கல்வி நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட விளையாட்டுத் துறை பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. நான் முதன்முதலில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றபோது வெறும் 200 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.
ஆனால், தற்போது சுமார் 20,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இளம் தலைமுறையினரிடம் அபாரமான திறமைகள் வெளிப்பட்டு வருகின்றன.
விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக எனது அறக்கட்டளை மூலம் 11 முதல் 16 வயதுக்குட்பட்ட 250 இளம் வீரர்களுக்குத் தேவையான பயிற்சிகளும் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன், நாடு முழுவதும் உள்ள 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் ஒலிம்பிக் விழுமியக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொருவரும் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், விளையாட்டுகளில் ஈடுபடுவது சிறந்த ஒழுக்கத்தையும், தலைமைப் பண்புகளையும் கற்றுக்கொடுத்து அவர்களைச் சிறந்த குடிமக்களாக உருவாக்கும்.
விளையாட்டு என்பது பதக்கங்களுக்கானது மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை. உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உடலியக்கமும் விளையாட்டும் மிகச் சிறந்த மருந்தாகும்.
மத்திய அரசும் ‘கேலோ இந்தியா’ போன்ற திட்டங்கள் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாயை விளையாட்டுத் துறைக்காக முதலீடு செய்து வருகிறது.
இந்த முதலீடுகளும் முயற்சிகளும் கிராமப்புற மற்றும் அடித்தட்டு நிலையை (Grassroots level) சென்றடையும்போது, இந்திய விளையாட்டுத் துறை உலக அரங்கில் மேலும் பிரகாசிக்கும்.
விளையாட்டு வீரர்கள் கவனச்சிதறல்களைக் கடந்து, நிகழ்காலத்தில் முழு கவனத்தைச் செலுத்துவதைப் பயிற்சியாகக் கொள்ள வேண்டும்.
கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் எக்காரணத்தைக் கொண்டும் இலக்கைக் கைவிடாத குணம் ஆகியவைதான் ஒருவரை வாழ்க்கையிலும் விளையாட்டிலும் வெற்றியாளராக்கும் என்று அவர் தெரிவித்தார்





