கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தக்காளிக்கான விதைப்புக்கு முந்தைய விலை முன்னறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக முக்கியமான காய்கறிப் பயிர்களில் தக்காளியும் ஒன்றாகும். இதுநாட்டின் மொத்த காய்கறி உற்பத்தியில் சுமார் 9.5 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. உலக அளவில் தக்காளி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், உலக உற்பத்தியில் சுமார் 11 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.
இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் முதல் முன்மதிப்பீடுகளின்படி (2025-2026 நாட்டில் சுமார் 8.75 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டு, சுமார் 227 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத், ஒடிசா. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை இதன் முக்கிய உற்பத்தி மாநிலங்களாகும்.
தமிழ்நாடு சுமார் 0.44 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தக்காளியைப் பயிரிட்டு. சுமார் 14 லட்சம் டன்களை உற்பத்தி செய்வதன் மூலம் நாட்டின் மொத்த தக்காளி சாகுபடி பரப்பளவில் சுமார் 5 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகியவை தமிழ்நாட்டில் தக்காளி அதிகம் உற்பத்தி செய்யப்படும் மாவட்டங்களாகும்.
உள்ளூர் சாகுபடி தக்காளி கிடைப்பதில் கணிசமான பங்களிப்பை அளித்தாலும், அண்டை மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிலிருந்து வரும் வரத்துகளும் தமிழ்நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.
தற்போது, கோயம்புத்தூர் மொத்த விற்பனை சந்தையானது அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் கர்நாடகாவிலிருந்து வரும் வழக்கமான வரத்துகள் மூலம் தக்காளியைப் பெறுகிறது. அதே வேளையில், உபரி வரத்துகள் ஒட்டன்சத்திரம் சந்தை வழியாக கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன. இது அதிகப்படியான வரத்தை நிர்வகிக்கவும். சந்தையில் தக்காளி கிடைப்பதை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.
இச்சூழலில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பிரிவின் கீழ் செயல்படும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை நுண்ணறிவுப் பிரிவு. ஒட்டன்சத்திரம் மற்றும் கோயம்புத்தூர் சந்தைகளில் கடந்த 15 ஆண்டுகளில் நிலவிய தக்காளி விலைகளை ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளின்படி, அறுவடை காலத்தில் நல்ல தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோவுக்கு சுமார் ரூ. 33 முதல் 35 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வர்த்தகத் தகவல்களின்படி, பருவமழை மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரும் வரத்து ஆகியவற்றைப் பொறுத்து விலையில் மாற்றம் ஏற்படலாம். எனவே, விவசாயிகள் இதற்கேற்ப தங்கள் விதைப்பு முடிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சந்தைப்படுத்தல் தொடர்பான விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள:
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தை நுண்ணறிவுப் பிரிவு
வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வுகள் மையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 641 003.
தொழில்நுட்ப விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள:
பேராசிரியர் மற்றும் தலைவர்
காய்கறிப் பயிர்கள் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 641 003.





