கோவை: அதிமுக துவங்கப்பட்ட நாளிலிருந்து கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்த எனக்கு, கடந்த 13 ஆண்டுகளாக எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. பல கட்டங்களில் அவமதிக்கப்பட்ட போதிலும், இதுவரை கட்சி மாறாமல் இருந்ததற்கு காரணம் இந்த கரைவேட்டியும், என்னுடன் பயணித்த உங்களும் தான் எனக் கூறிய கோவை மாவட்ட அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செ.ம. வேலுசாமி, மேடையிலேயே கண்கலங்கியதால் கூட்டத்தில் இருந்த பலரும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டனர்.
கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம், கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்றது.
அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ச்சுனன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், அதிமுக புறநகர் மாவட்ட செயலாளருமான செ.ம. வேலுசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராமன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய செ.ம. வேலுசாமி, “அதிமுக ஆலமரத்தைப் போன்ற இயக்கம். தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுகதான்” என்றார்.
மேலும், “தூய சக்தி என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசில், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பணம் வசூலிக்கப்படுவதாக அக்கட்சியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்” என குற்றம்சாட்டினார்.
Also Read: கோவையில் மோதிக்கொண்ட இந்திய-மலேசிய வீரர்கள்!
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 13 ஆண்டுகளாக கட்சியில் எந்தப் பதவியும் இல்லாமல் பல்வேறு அவமானங்களை சந்தித்தேன். பல்வேறு கட்சிகள் அமைச்சர் பதவி உள்ளிட்ட பொறுப்புகளை வழங்க முன்வந்தன. பணம் கொடுத்தும் என்னை அழைத்தனர். ஆனால் நான் எந்தக் கட்சிக்கும் செல்லவில்லை.
எங்கோ இருந்த செங்கத்துறை வேலுசாமியை சட்டமன்றத்திற்கு அனுப்பியது இந்தக் கட்சிதான். சில நேரங்களில் வேறு கட்சிக்கு சென்று விடலாமா என்று நினைத்திருக்கிறேன். ஆனால் இந்த கரைவேட்டியை பார்க்கும் ஒவ்வொரு முறையும் அந்த எண்ணம் மாறிவிடும்” என்று கூறியபோது மேடையிலேயே கண்கலங்கி குரல் தழுதழுத்தது.
“என்னுடன் தோழமையாக இருந்த உங்களை விட்டுப் பிரிய மனம் இல்லாததால்தான் இன்று வரை இந்த இயக்கத்திலேயே இருக்கிறேன்” என்று அவர் உணர்ச்சிபூர்வமாக பேசியபோது, கூட்டத்தில் இருந்த நிர்வாகிகள் பலரும் கண்ணீர் மல்க, “அண்ணா… நாங்கள் இருக்கிறோம்… அழாதீர்கள்” என்று ஆறுதல் கூறினர். இதனால் கூட்டத்தில் சில நிமிடங்கள் சோகமான சூழல் நிலவியது.





