கோவை: கோவை சின்ன தடாகம் அருகே உள்ள அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் படிக்கட்டில் வழிமறித்து நின்ற காட்டு யானையிடம், “போ சாமி தெக்கால… எங்களுக்கு வழி விடு சாமி!” என பக்தர் ஒருவர் வேண்டுகோள் விடுத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மலைப்பகுதியில் அமைந்துள்ள அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயிலில் அன்னதானம் மற்றும் உணவு தயாரிப்பதற்காக சிலர் அரிசி, பருப்பு, எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை சுமந்தபடி படிக்கட்டுகளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று திடீரென கோயில் படிக்கட்டுகளின் குறுக்கே வந்து நின்றது. உணவுப் பொருட்களுடன் வந்த பக்தர்களைக் கண்ட யானை ஆக்ரோஷமாக அவர்களை நோக்கி நகர முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த பக்தர்கள் படிக்கட்டிலேயே நின்று, யானை விலகும் வரை காத்திருந்தனர். நீண்ட நேரமாக யானை அங்கிருந்து நகராமல் இருந்ததால், கோயிலுக்குச் செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்தனர்.
VIDEO
அப்போது பக்தர் ஒருவர் யானையைப் பார்த்து, “போ சாமி தெக்கால… எங்களுக்கு வழி விடு சாமி!” என வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து அந்த யானை மெதுவாக படிக்கட்டில் இருந்து விலகி வனப்பகுதியை நோக்கிச் சென்றது.
இந்த காட்சியை அங்கிருந்த மற்றொரு பக்தர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் இருக்கக்கூடும் என வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.
எனவே, கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





