கோவை; தொழில் துறையினருக்கு சாதகமாக உருவாகி வரும் சூழ்நிலைகள் காரணமாக, பல்வேறு நிறுவனங்கள் கோவையில் தொழில் துவங்குவதற்கு படையெடுத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில்முனைவோர்கள் எளிதில் தொழில் துவங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
உதிரி பாகங்கள்
உள்நாட்டுத் தேவை மற்றும் ஏற்றுமதிக்காக பெரும்பாலான சர்வதேச வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவிலேயே தொடர்ந்து தங்கள் இருப்பை அதிகரித்து வருகின்றன. இதனால், அமெரிக்கா போன்ற சர்வதேச நிறுவனங்களுக்குப் பிடித்தமான உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதனால், இங்கு உதிரிபாகங்களைத் தயாரிக்கும் போக்கு பெருமளவில் அதிகரித்துள்ளது.

இதன்மூலம், 57 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்திய வாகன உதிரிபாகத் துறை, 2026ம் ஆண்டிற்குள் 200 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வாகன உதிரிபாகங்களின் ஏற்றுமதி ஆண்டுக்கு 23.9 சதவீத வளர்ச்சியடைந்து, 2026ம் ஆண்டிற்குள் 80 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கோவை பங்களிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு மையங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது. சென்னை மற்றும் கோவை போன்ற நகரங்கள் நாட்டின் மொத்த வாகன உதிரிபாக உற்பத்தியில் சுமார் 35 சதவீதப் பங்களிப்பை வழங்குகின்றன. 2018-19 நிதியாண்டில், தமிழ்நாட்டின் வாகன உதிரிபாகத் துறை 49 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை எட்டி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.,) 2.3 சதவீதத்திற்கும் அதிகமாகப் பங்காற்றியுள்ளது.
தற்போது தமிழ்நாடு மாநிலத்தில் சுமார் 553.85 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் 100 முக்கிய வாகன உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் உற்பத்தியாவதுடன், 140 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இது நேரடியாக சுமார் 45,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.
நிறுவனங்கள் ஆர்வம்
கோவையைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவிலுமே ஒரு பரபரப்பான முக்கிய தொழில் மையமாக வேகமாக உருவெடுத்து வருகிறது. பாரம்பரிய தொழில்முனைவு, புதுமை மற்றும் இன்ஜினியரிங் திறன்களுக்கு பெயர் பெற்ற இந்தப் பகுதி, பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்காற்றி வருகிறது.

தமிழக அரசின் சாதகமான தொழிற் கொள்கையின் காரணமாக, தொழில்துறையினர் உற்பத்தித் தேவைகளுக்காக தமிழகத்தை, குறிப்பாக கோவை போன்ற இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். அண்மையில், உத்தரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவை பின்னுக்குத் தள்ளி, மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2022-23ம் ஆண்டில் தமிழ்நாட்டின் மின்னணு ஏற்றுமதி ரூ.44,044 கோடியைத் தொட்டு, கடந்த 2 ஆண்டுகளில் 223% வளர்ச்சியைக் கண்டுள்ளது.
பாரம்பரியமாக ஜவுளி, ஜவுளி இயந்திரங்கள், மோட்டார்கள், பம்புகள் மற்றும் இன்ஜினியரிங் துறைகளில் வலுவாக உள்ள கோவை மண்டலம், தற்போது பாதுகாப்புத் துறை தளவாட உற்பத்தியின் ஒரு பகுதியாகவும் உள்ளது. மத்திய அரசின் சுயசார்பு பாரதம் முயற்சிகளின் பலனால், இங்கு பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல, எண்ணற்ற சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன.
குத்தகை
மேலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு முக்கிய பாகங்களை வழங்கும் ஏராளமான வார்ப்பாலைகள் மற்றும் துல்லியமான கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களும் உள்ளன. பெருமளவிலான நிபுணர்கள், தொழில்நுட்ப மனிதவளம் மற்றும் தொழில்முனைவோரின் வருகை உள்ளிட்ட காரணிகள் கோவையை தொழில் நிறுவனங்களின் விருப்பமான தேர்வாக மாற்றியுள்ளது.இங்கு உடனடியாக பயன்படுத்தக்கூடிய தொழிற்கூடங்கள்,டைடல் பார்க் மற்றும் தொழிற்பேட்டைகளைத் தவிர, கோவைர் சிறப்பு பொருளாதார மண்டலத்தையும் (SEZ) கொண்டுள்ளது.
தொழில் வளர்ச்சியை அடைவதற்கு ஏதுவாக, கோவையில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2,84,000 சதுர அடி மற்றும் 1,54,000 சதுர அடி பரப்பளவிலான இரண்டு பிரம்மாண்டமான, உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய தொழிற்கூடங்கள் குத்தகைக்குக் கிடைக்கின்றன.
ஜாக்பாட்
ஆட்டோமொபைல்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கனரக உபகரண பாகங்கள், மின் மற்றும் மின்னணு உதிரிபாகங்கள், சிப்கள், எல்.இ.டி.,விளக்குகள், மின்சார வாகனங்கள், ரோபோடிக்ஸ், ஜெனரேட்டர்கள், செமிகண்டக்டர்கள், வால்வுகள் போன்றவற்றை தயாரிக்கும் அலகுகளை அமைப்பதற்கு இந்தக்கூடங்கள் மிகவும் ஏற்றவையாக உள்ளன. இக்கூடங்களில் கனரக கிரேன்கள், ஜெனரேட்டர்கள் , மின்சாரம் மற்றும் நீர் வசதிகள் எனப் பல கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
எஸ்.இ., போர்ஜ் லிமிடெட், சுஷ்லான் எனர்ஜி, எல்அன்டி எம்பிடிஏ மற்றும் இசட்எப் வின்ட் பவர் ஆகிய சில முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே இந்த செஸ் மண்டலத்தில் தங்களது கிளைகளை அமைத்து சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
நல்ல வாய்ப்பு
அது மட்டும் இல்லாமல், அனைத்து அடிப்படை வசதிகளுடனும் கூடிய 7 ஏக்கர் மற்றும் 3.66 ஏக்கர் வெறுமனே உள்ள நிலங்களும் குத்தகைக்குக் கிடைக்கின்றன. இந்த தொழிற்கூடங்களின் அமைப்பாளர்கள், உங்கள் தேவைக்கேற்ப கட்டடங்களை வடிவமைத்துக் கொடுக்கும் வசதியையும் வழங்குகின்றனர். அவர்களின் வடிவமைப்புத் குழு, தொழிலதிபர்களின் தேவைக்கேற்ப பிரத்யேக மின்சாரம் மற்றும் நீர் வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்பை குறுகிய காலத்தில் உருவாக்க இணைந்து செயல்படுகின்றனர்.
தற்போது, கோவையில் தொழில் துவங்க நினைக்கும் இளம் தொழில்முனைவோர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.




