செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு பாஜக காரணமா?- கோவையில் நயினார் நாகேந்திரன் விளக்கம்

கோவை: செங்கோட்டையன் அதிமுக வில் இருந்து நீக்கப்பட்டதற்கு பாஜக காரணம் இல்லை என நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க மாநில பயிலரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசும்போது,

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினமான 17 ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 2ம் தேதி வரையிலும் இந்த சேவை வாரம் நிர்வாக சேவை நலத்திட்டங்கள் வழங்குவதற்கு முடிவெடுத்து, தன்னுடைய 17 வயதில் இருந்து 75 வயது வரையிலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த நாட்டிற்கு செய்த பெரும் சேவைகள் இந்திய நாட்டின் பெருமையை உலகெங்கும் சொல்லும் விதமாக, தலை நிமிர்த்தி நின்ற மாபெரும் தலைவர் அவருக்கு எடுக்கப்படுகின்ற விழாவின் காரணமாகவும், அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி பிறகு பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய அந்த நாள், பிறகு லால் பகதூர் சாஸ்திரி இவர்களை எல்லாம் மனதில் வைத்து அக்டோபர் இரண்டாம் தேதி வரையிலும் கிளை வரையிலும் அமைப்புகள் ஏற்படுத்துவதற்காக இந்த கூட்டம் நடைபெற்றிருக்கிறது என்று கூறினார்.

தொடர்ந்து டி.டி .வி தினகரன் கூட்டணியில் இருந்து தான் வெளியே சென்றதற்கு நயினார் நாகேந்திரன் காரணம் என கூறி இருக்கிறாரே என்ற செய்தியாளர் கேள்விக்கு, அவர் தன் கட்சியோடு கூட்டணியில் இருந்து வெளியே சென்று இருக்கிறார், என்ன காரணத்திற்காக அவர் வெளியே சென்றார். என்பது எங்களுக்கு தெரியாது. பாரதிய ஜனதா கட்சி என்றைக்குமே கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று தான் நினைக்கும். தி.மு.க ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்றால், எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று தான் நான் கூறிக் கொண்டு இருக்கிறேன் என்றார்.

எந்த ஒரு இடத்திலும் கூட நான் யாரையும் வேண்டாம் என்று சொன்னதே கிடையாது. நீங்கள் என்னுடைய எந்த பேட்டியை வேண்டுமானாலும் எடுத்து பார்க்கலாம், ஒருபோதும் நான் கூட்டணி வேண்டாம் என சொல்லியதே கிடையாது.
கூட்டணி வலுவாக இருந்தால் மட்டும் தான் தி.மு.க வை வீழ்த்த முடியும் என நான் கூறி இருக்கிறேன் என தெரிவித்தார்.

Advertisement

நயினார் நாகேந்திரன் ஆணவத்தோடு நடந்து கொள்வதாக டி.டி.வி தினகரன் சொல்லி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, அவர் சொல்லும் குற்றச்சாட்டிற்கு எப்படி பொறுப்பேற்க முடியும், பாராளுமன்ற தேர்தலை எடுத்துக் கொண்டால் TTV உடன் கூட்டணியில் இருக்கிறோம்.அதற்கு முன்னர் சட்டமன்றத் தேர்தலை பார்த்தால் 165 இடங்களில் போட்டியிட்டார்கள். இரண்டு சதவீதம் வாக்கு வாங்கி இருந்தார்கள். நாங்கள் யாரையுமே குறை சொல்லவில்லை. நாங்கள் அவர் சொல்வதைப் போல திருப்பி குறை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

ஓ.பி.எஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்த பொழுது, அவரை நான் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றே ஆனால் நையினாரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறியிருந்தாரே என்ற கேள்விக்கு, அவர்கள் இருவரும் எதனால் இப்படி சொல்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை, அவர்கள் இருவரும் சொல்லி வைத்துக் கொண்டு சொல்கிறார்களா ? என தெரியவில்லை.. அந்த குற்றச்சாட்டுகளுக்கு ஒருபோதும் நான் பொறுப்பேற்க மாட்டேன் என்று கூறினார்.

அ.தி.மு.க வில் இருந்து செங்கோட்டையனை நீக்கி இருப்பது குறித்தான கேள்விக்கு, அந்த முடிவை எடுத்தது அ.தி.மு.க வின் பொதுச் செயலாளர். அது அவர்களின் உட்கட்சி பிரச்சனை. அது குறித்து நாம் எந்த கருத்தும் சொல்ல முடியாது என்று கூறினார். செங்கோட்டையன் இவ்வகாரம் குறித்து என்னை டெல்லியில் அழைத்து பேசினார்கள் எனக் கூறியிருந்தாரே என்ற கேள்விக்கு, என்றைக்குமே பாரதிய ஜனதா கட்சி அடுத்த விவகாரங்களில் தலையிடாது. ஏப்ரல் 12 ஆம் தேதி கூட்டணியை பற்றி பேசும்பொழுது, உள்துறை அமைச்சர் தெளிவாக கூறியிருக்கிறார். அவர்கள் இதையெல்லாம் உட்கட்சி பிரச்சனை என்று கூறிவிட்டார்கள், தற்போது வரை நாங்கள் எந்த கட்சிகளுக்குள்ளும் நடக்கும் விவகாரத்திலும் தலையிட வில்லை என்றார்.

அ.தி.மு.க கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தான் டி.டி.வி யும் பன்னீர் செல்வமும், தற்போது அ.தி.மு.க வும் பா.ஜ.க வும் இணைந்து செல்ல வேண்டும் என்பதற்காக அவர்களை வெளியேற்றியதாக சொல்லப்படுகிறது என்ற கேள்விக்கு, அவர்கள் தனித் தனியான கட்சி வைத்து இருக்கிறார்கள், அப்படியான கட்சியை நாம் எப்படி வெளியே செல்ல சொல்ல முடியும் ?.. இப்பொழுதும் நான் கூறுகிறேன் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டும் தான் தி.மு.க வை வீழ்த்த முடியும். தி.மு.க வை வீழ்த்த வேண்டாம் என நினைத்தால் அது அவர்களின் விருப்பம். நான் தலைவர் பதவி ஏற்றதில் இருந்து கூறிக் கொண்டு இருக்கிறேன், என்றைக்குமே நான் டி.டி.வி யின் கூட்டணி வேண்டும் என்று தான் கூறிக் கொண்டு இருக்கிறேன் என கூறினார்.

அமித்ஷா அ.தி.மு.க வை ஒன்றிணைப்பார் என நினைத்தேன் ஆனால் அந்த முயற்சி நடக்கவில்லை அதனால் தான் வெளியேறினேன் என டி.டி.வி கூறி இருப்பது குறித்தான கேள்விக்கு, இது அவரின் சொந்த கருத்தாக இருக்கும், உள்துறை அமைச்சர் எப்படி ஒன்றிணைக்க முடியும்??. அ.தி.மு.க வை ஒன்றிணைப்பேன் என உள்துறை அமைச்சர் எங்காவது சொல்லி இருக்கிறாரா??.. இப்படி கூறி உள்துறை அமைச்சரை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. என்று கூறினார். டி.டி.வி சொல்வது போன்று நான் ஒருபோதும் எந்த ஆணவத்துடனும் நடந்து கொண்டது கிடையாது என்றார்.

என்னுடைய கட்சியை துக்கடா கட்சியை போன்று நினைத்துக் கொண்டார் நயினார் என டி.டி.வி கூறியிருப்பது குறித்தான கேள்விக்கு,
தூக்கடா கட்சி என்று நாம் யாரையும் நினைக்க முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் பா.ஜ.க எதற்காக அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்ப வேண்டும்??. அவர்கள் எவ்வளவு சதவீதம் வாக்குகள் வைத்து இருக்கிறார்கள் என்பதை பற்றி எல்லாம் இங்கு கிடையாது, எல்லாரும் ஒன்றினை வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். தி.மு.க வை வீழ்த்த வேண்டாம் என அவர் நினைக்கிறாரோ என்னவோ இப்படி எல்லாம் பேசுகிறார் என்றார்.

டி.டி.வி க்கு அழைப்பு கொடுப்பீர்களா இல்லை பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு, என்னை பொருத்தவரை அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன் என்று கூறினார். அமித்ஷா உடைந்த அ.தி.மு.க வை ஒன்றிணைக்க மிகுந்த பாடுபட்டார் என ஓ.பி.எஸ் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார் என்று கேள்விக்கு, ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது எனக்கு தெரியாது.. மீண்டும் இவர்கள் கூட்டணிக்கு வந்தால் அனைவருக்கும் நல்லது என்றார்.

NDA கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரும் எனக் கூறினீர்கள், ஆனால் இப்பொழுதே இரண்டு கட்சிகள் விலகி விட்டதே என்ற கேள்விக்கு,
இன்னும் தேர்தலுக்கு எட்டு மாதங்கள் இருக்கிறது. அவசரப்பட வேண்டாம் நிச்சயம் வருவார்கள். எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை தாங்கினால் தான் வளர முடியும் என்றார்.

தி.மு.க ஆட்சியில் 24 லாக்கப் மரணங்கள் நடந்து உள்ளது. எல்லா இடங்களிலும் போதைப் பொருட்கள், வெட்டு குத்து கொலை போன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது, மொத்தமாகவே தமிழகத்தில் முதல்வர் சட்டம் ஒழுங்கு போலீஸ் என எதுவுமே செய்யவில்லை என்றார்.

தேர்தலில் கட்சிகள் மாறி, மாறி வந்து கொண்டு தான் இருக்கும், இதையெல்லாம் வைத்து அவர்கள் வருவார்கள் என எந்த விதத்திலும் கணக்கு போட முடியாது. மக்கள் என்ன முடிவு செய்து இருக்கிறார்களோ ? அதை பொறுத்து தான் வாக்களிப்பார்களே தவிர.. கூட்டணியில் இருந்து வெளியே சென்று விட்டார்கள் அதனால் வாக்கு கிடையாது என்றெல்லாம் நினைக்க மாட்டார்கள் என்று கூறினார்.

அண்ணாமலையின் செயல்பாட்டிற்கும் உங்களின் செயலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, மனிதர்களின் கையில் ஐந்து விரல் இருக்கிறது, ஐந்து விரலும் ஒன்று போல் செயல்படாது.. அண்ணாமலை வேறு நான் வேறு என்று கூறினார். இஸ்லாமியருக்கு பா.ஜ.க வில், தகுந்த இடம் கிடைப்பது இல்லை என அலிஷா கூறியிருப்பது குறித்தான கேள்விக்கு,
ஒருத்தர் கட்சியில் இருந்து சென்று விட்டால் அவர்களை பற்றி பேசுவது தேவையில்லாதது எனக் கூறினார்.

நிலையற்ற கூட்டணியை நம்பி எப்படி ? மக்கள் வாக்களிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறதே என்ற கேள்விக்கு, அ.தி.மு.க ஒரு பெரிய கட்சி, தேசிய அளவில் பாரதிய ஜனதா ஒரு பெரிய கட்சி, மாநிலத்தில் முதல்வராக வரக் கூடிய கட்சி தேசியக் கட்சியோடு இணக்கமாக இருந்தால் மட்டும் தான் நிறைய சலுகைகளை, திட்டங்களை பெற்றுக் கொள்ள முடியும். மக்கள் பிரதமர் நரேந்திர மோடியை நம்பி நிச்சயம் வாக்களிப்பார்கள் என்று கூறினார்.

செங்கோட்டையனை பின்னால் இருந்து பாரதிய ஜனதா கட்சி இயக்குகிறது என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, பாரதிய ஜனதா கட்சி யாருடைய பின்னால் இருந்தும் யாரையும் இயக்கவில்லை என்றார்.
நயினார் நாகேந்திரன் குடும்பத்தில் இரண்டு பேருக்கு பதவி வழங்கப்படுவதாக இருந்த விமர்சனம் குறித்த கேள்விக்கு,
நயினார் பாலாஜி, நான் மாநில தலைவராக வருவதற்கு முன்பாகவே இளைஞர் அணியின் மாநில துணை தலைவராக இருந்தார். பாரதிய ஜனதா என்பது ஒரு குடும்ப கட்சி கிடையாது,ஆனால் தி.மு.க ஒரு குடும்ப கட்சி. கலைஞர், ஸ்டாலின், உதயநிதி, தயாநிதி, கனிமொழி என அவர்கள் தான் குடும்ப ஆட்சி செய்கிறார்கள். ஆனால் பாரதிய ஜனதா ஒரு போதும் அப்படி ? கிடையாது. என்னுடைய பதவி காலமே மூன்று வருடம் தான். ஆனால் இந்த கட்சியை யாருக்கும் சாதகமான கட்சி கிடையாது என்றார்.

அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு பி.சி.சி யில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பது குறித்து தி.மு.க விமர்சனம் வைக்கிறது என்ற கேள்விக்கு,
பொன்முடியின் மகன் எதில் இருக்கிறார், கிரிக்கெட் வாரிய தலைவராக இருக்கிறார் அல்லவா ??.. இதை நீங்கள் எப்படி ? சொல்வீர்கள் என கேள்வி எழுப்பி சென்றார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சுந்தராபுரம், கிணத்துக்கடவு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்…

கோவை: கோவை சுந்தராபுரம் கிணத்துக்கடவு பகுதியில் நேரடி ஆய்வு மேற்கொண்டார் கோவை மாவட்ட ஆட்சியர். கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் சுந்தராபுரம் பகுதியில் இயங்கி வரும் சமூக நீதி மாணவர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர்...

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...