கோவை: ஆர்.எஸ்.எஸ். குறித்து அவதூறு கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நூலை தடை செய்யக் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அவதூறாகவும், தரக்குறைவாகவும் சித்தரிக்கும் வகையில் உள்ளதாகக் கூறப்படும் நூலை வெளியிடுவதையும், விநியோகிப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழக்கறிஞர் சண்முகம் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்ட நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருவதுடன், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயலில் ஈடுபட்ட உறுப்பினராக இருந்து சமூக, கலாச்சார மற்றும் தேசப்பணிகளில் பங்கேற்று வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சண்முகம் கூறுகையில், RSS Brahmin Became a Periyarist என்ற தலைப்பில் ஒரு நூல் வரும் ஜூலை 17-ஆம் தேதி புத்தக திருவிழாவில் வெளியிடப்பட உள்ளதாகவும், அந்த நூலின் ஆசிரியர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல என்றும், அந்த அமைப்பைப் பற்றி அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கும் எந்தத் தகுதியும் அவருக்கு இல்லை.
மேலும், நூலின் தலைப்பில் “RSS” என்ற பெயரை பயன்படுத்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நூலின் உள்ளடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை குறித்து பொய்யான, தரக்குறைவான, அவதூறான மற்றும் கண்ணியத்தை குலைக்கும் வகையிலான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இத்தகைய வெளியீடு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நற்பெயர், கண்ணியம் மற்றும் பொதுமக்களிடையே உள்ள நம்பிக்கையை பாதிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அமைப்பைப் பற்றி தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் உள்ளதாகவும் டாக்டர் ஆர். சண்முகம் தெரிவித்துள்ளார்.
எனவே, சம்பந்தப்பட்ட நூலின் வெளியீடு மற்றும் விநியோகத்தை உடனடியாகத் தடுக்க சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதுதொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





